ராணிப்பேட்டை, ஆக. 19 - ராணிப்பேட்டை மாவட்டம், கலவை பேரூ ராட்சிக்குட்பட்ட அருந்ததியர் பாளையம் பகுதி கலவை வாழைப்பந்தல் சாலை வழியாக குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை அதிக அளவில் பயணித்து வருகிறார்கள். இப்பகுதியில் மாட்டிறைச்சி விற்பனை செய்யும் கடைகள், அதன் கழிவுகளை மக்கள் குடியிருப்பு பகுதிகளில் கொட்டுவதால் மழைக்காலங்களில் அப்பகுதியில் துர்நாற்றத்துடன் வீசுகிறது. மேலும் குளமும் மாசுபடுகிறது. இறைச்சி கழிவை உட்கொள்ள நெடுஞ்சாலையில் தெரு நாய்கள் அதிகம் வருவதால் வாகன ஓட்டிகள் திடீர் என்று பிரேக் பிடிக்கும் போது விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பகுதி பொதுமக்கள் இளைஞர்கள் திங்களன்று (ஆக. 19) நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் முகாமில் மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலாவிடம் மனு அளித்தனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவரிடம் சுட்டிக்காட்டினர். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.