districts

சென்னையில் டிச. 21 முதல் கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்

சென்னை, டிச. 18- சென்னையில் கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் வரும் 21ஆம் தேதி முதல் வழங்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் அன்பு ஆபிரகாம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாநகர் போக்குவரத்து கழக பேருந்து களில் 60 வயதிற்கு மேற்பட்ட சென்னை வாழ் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில், கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் டிசம்பர் 2022 (அரையாண்டிற்கு ஒரு முறை) வரை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. தற்போது அடுத்த அரையாண்டிற்கு ஜனவரி 2023 முதல் ஜூன் 2023 வரை பயன்படுத்தக் கூடிய ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம், 6 மாதங்களுக்கு பயண டோக்கன்கள், அடையாள அட்டை புதுப்பித்தல், புதிய பயனாளிக்கு வழங்குதல் ஆகியவை 40 மையங்களில் வரும் 21ஆம் தேதி முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை வழங்கப்படும். அதன் பின்னர் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அந்தந்த பணிமனை அலுவலகத்தில் அலு வலக நேரத்தில் வழங்கப்படும். மூத்த குடி மக்கள், இத்தகைய கட்டணமில்லா பயண டோக்கன்கள் மற்றும் அடையாள அட்டை கள் புதிதாக பெறுவதற்கு இருப்பிடச் சான்றாக குடும்ப அட்டையின் நகலுடன், வயது சான்றாக ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், கல்வி சான்றிதழ், வாக்காளர் அடை யாள அட்டையின் நகல் மற்றும் 2 வண்ண பாஸ்போர்ட் புகைப்படங்களை சமர்ப்பிக்க வேண்டும். சம்மந்தப்பட்ட ஆவணங்களை சரிபார்க்க ஏதுவாக அவற்றின் அசலை கையில் வைத்திருக்க வேண்டும். மேலும், புதுப்பிக்க வரும் மூத்த குடிமக்கள், தங்களது முந்தைய கட்டணமில்லா பயண அடையாள அட்டையுடன் தற்போதைய பாஸ்போர்ட் அளவிலான ஒரு புகைப்படம் மட்டும் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.