சிதம்பரம், மார்ச் 2- சிதம்பரம் பகுதியில் தொடர்ந்து குடியிருப்பு, நீர்நிலைகளில் தஞ்சம் அடையும் முதலைகள் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிதம்பரம் அருகே உள்ள சி.வக்காரமாரி கிராமத்தின் குளத்தில் ஞாயிறன்று முதலை ஒன்று சென்றுள்ளது. இதனை அப்பகுதி பொதுமக்கள் பார்த்து அலறி அடித்து ஓடி கூச்சலிட்டுள்ளனர். இதுகுறித்து சிதம்பரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் பொதுமக்கள் உதவியுடன் குளத்தில் வலை வீசி 7 அடி நீளமுள்ள 50 கிலோ எடைகொண்ட முதலையை பத்திரமாக பிடித்து வக்காரமாரி நீர் தேக்க ஏரியில் பாதுகாப்பாக விட்டனர். இதேபோல் சனிக்கிழமை அன்று குமராட்சி கிராமத்தில் ரமேஷ் என்பவரின் வீட்டில் முதலை புகுந்துள்ளது இதனையும் மீட்டு வக்காரமாரி ஏரியில் விட்டுள்ளனர். இந்த முதலை 6 அடி நீளம் கொண்டது என வனத்துறையினர் தெரிவித்தனர். சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் தொடர்ந்து இதுபோன்ற முதலைகள் அடிக்கடி குடியிருப்பு மற்றும் நீர்நிலைகளில் தஞ்சம் அடைகிறது. சில நேரங்களில் நீர்நிலைகளில் முதலைகள் இருப்பது தெரியாமல் விவசாயிகள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் முதலை கடிக்கு ஆளாகி பலர் ஊனமுற்றும் சிலர் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து தமிழக அரசை வலியுறுத்தி வருகிறார்கள். இதுகுறித்து வனத்துறையினர் கடந்த 2 மாதத்திற்கு முன் கடலூர் மாவட்டத்தில் சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது வெள்ளநீரில் பல்வேறு இடங்களில் இருந்த முதலைகள் வெள்ளநீருடன் அடித்து வந்து நீர் நிலைகளில் தஞ்மடைந்துள்ளது. நீர்நிலை வற்றும் போது அவை இரை தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு செல்கின்றன. தகவல் கிடைத்தவுடன் அதனை பிடித்து விடுகிறோம் என்றும். இதேபோன்று மழை மற்றும் வெள்ள காலங்களில் முதலைகள் ஆறுகளிலும், நீர்தேக்க அணைகளில் இருந்தும் தண்ணீரில் அடித்து வருவதால் முதலைகள் அதிகமாக இந்த பகுதியில் வந்து தஞ்சமடைந்துள்ளதாக கூறுகின்றனர்.