திருவள்ளூர், செப். 30- சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு குப்பம்மா சத்திரம் பகுதியில் உள்ள வீடுகளை இடித்து அப்புறப்படுத்தியுள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அதே ஊராட்சியில் குடிமனை மற்றும் பட்டா வழங்க வேண்டும் என வலி யுறுத்தி சிபிஎம் சார்பில் திங்களன்று(செப்30) மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். திருவள்ளூர் அருகில் உள்ள கைவண்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட குப்பம்மாசத்திரம், மேலாகரம் ஆகிய கிராமங்களில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வந்த 50 வீடுகளை சென்னை -திருப்பதி தேசிய நெடுஞ்சாலை விரி வாக்கத்திற்காக வெள்ளியன்று இடித்து அப்புறப்படுத்தினர். மேற்கூரைக்கு மட்டும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. மாற்று இடம் எதுவும் வழங்கப்படவில்லை. வீடுகளை இழந்த மக்கள் குழந்தை கள், பெண்கள் முதியோர் என அனை வரும் நடுவீதியில் நிற்கின்றனர். வீடு களை இழந்துள்ள குடும்பங்களுக்கு கைவண்டூர் ஊராட்சியிலேயே குடிமனை மற்றும் பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திங்களன்று (செப் 30), திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இதில் சிபிஎம் வட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு, வட்ட குழு உறுப்பினர் ஆனந்தன், முறைசாரா தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகி வி.மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.