சென்னை, அக். 6 - வேளச்சேரி -பரங்கிமலை பறக்கும் ரயில் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலந்தூர் பகுதி மாநாடு வலியுறுத்தி உள்ளது. கட்சியின் 9வது பகுதி மாநாடு ஞாயிறன்று (அக்.6) மூவசரம்பட்டில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், நங்கநல்லூர் கே.கே.நகரில் காவல் உதவி மையம் அமைக்க வேண்டும், கொளப்பாக்கம் - மணப்பாக்கம் சாலையை புதுப்பித்து செப்பனிட வேண்டும். கோவூரில் மின் மயானம், சமூக நலக் கூடம் அமைக்க வேண்டும். மீனம்பாக்கம் ரயில் நிலைய நடைமேடையிலேயே பயணச்சீட்டு வழங்கும் மையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டு செங்கொடியை மூத்த உறுப்பினர் வி.வடிவேல் ஏற்றினார். பொது மாநாட்டிற்கு பகுதிக்குழு உறுப்பினர் கே.மோகன்ஜி தலைமை தாங்கினார். பகுதிக்குழு உறுப்பினர்கள் கே.முரளி வரவேற்க, எம்.ராஜாமணி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார் தொடக்க உரையாற்றினார். வேலை அறிக்கையை ந.வெங்கடேசனும், வரவு செலவு அறிக்கையை எஸ்.அரி கிருஷ்ணனும் சமர்ப்பித்தனர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி.செந்தில்குமார், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.தாமோதரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ம.சித்ரகலா நிறைவுரையாற்றினார். பகுதிக்குழு உறுப்பினர் எம்.தயாளன் நன்றி கூறினார். பகுதிக்குழு தேர்வு 9 பேர் கொண்ட பகுதிக்குழுவின் செயலாளராக கே.வி.சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டார்.