திருவள்ளூர், செப் 9- எல்லாபுரம் அருகே மாளந்தூர் மற்றும் ஆவாஜிபேட்டை பகுதிகளில் நிறுத்தப்பட்ட சாலை பணிகளை மீண்டும் துவக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், எல்லாபுரம் ஒன்றியத்தில் வெங்கல்-சீத்தஞ்சேரி பிரதான சாலையிலிருந்து ஆவாஜிபேட்டை மற்றும் மாளந்தூர் ஊராட்சிகளுக்கு செல்லும் கிராம இணைப்பு சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இச்சாலையை மாளந்தூர், மாமண்டூர், காவனூர், ஆவாஜிபேட்டை, சென்னங்காரணி ஆகிய கிராம மக்கள் இந்த வழியாக தான் தேர்வாய் கண்டிகையில் உள்ள சிப்காட் தொழிற்சாலைக்கு சென்று வருகின்றனர். பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு இந்த சாலையை சீரமைக்க நபார்டு கிராம சாலை திட்டத்தின் கீழ் 2023 ஆம் ஆண்டு ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் மாளந்தூர் முதல் ஆவாஜிபேட்டை 4 கி.மீ தூரம் கிராமத்தில் தார் சாலை அமைக்கப்பட்டது. இதில் ஆவாஜிப்பேட்டையில் 300 மீட்டர், மாளந்தூர் 606 மீட்டர் சாலை வனத்துறைக்கு சொந்தமானது என்பதால், சாலை போட விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் சாலை அமைக்கும் பணி முழுமை நடைபெறாமல் உள்ளது. இது குறித்து மாளந்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் விஜயன் மற்றும் சிபிஎம் கிளைச் செயலாளர்கள் என்.முத்து, டி.குமார் ஆகியோர் மாவட்ட ஆட்சியர், ஊத்துக்கோட்டை வட்டாட்சியர், மாவட்ட வனத்துறை அலுவலர் ஆகியோரை சந்தித்து மனு அளித்துள்ளனர். பின்னர் வனத்துறையினர் மற்றும் திருவள்ளூர் கோட்டாட்சியர் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து அதன் அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வனத்துறையினர் சாலை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் இக்கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி சிபிஎம் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால் செப். 5 அன்று நேரில் சென்று மனு கொடுத்து வலியுறுத்தினார். ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.சாலை போடும் ஒப்பந்ததாரர் மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல் கடிதம் வேண்டும் என்பதால் காலதாமதம் ஆகிறது. இதில் மாவட்ட ஆட்சியர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.