திருத்தணி,ஜூன் 12-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருத்தணி வட்ட குழு சார்பில் தாரை தப்பட்டையுடன் தாம்பூல தட்டில் மனு கொடுத்து காத்திருப்பு போராட்டம் நடத்த இருந்த நிலையில் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபா, சிபிஎம் நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம், திருத்தணி வட்டாட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் ராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பெருமாள், வட்ட செயலாளர் அந்தோணி, மாவட்ட குழு உறுப்பினர் அப்சல்அகமத், வட்டக்குழு உறுப்பினர்கள் சின்னதுரை, பிருந்தாவனம், ரீசர், ஜெய்சங்கர் ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தை எதிரொலியாக பகத்சிங் நகர் இருளர் காலனியில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. அதேபோன்று செருக்கனூர் ஆதிதிராவிட மக்களுக்கு சுடுகாட்டு பாதை அமைக்க அதற்கான நிதி தயாராகி உள்ளது என்று வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதி அளித்தார். பீரகுப்பம் இருளர் காலனி மக்களுக்கு மாற்று இடம் வழங்க வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் கள ஆய்வு செய்தனர். கோரிக்கைகளை ஏற்று உடனடியாக அதற்கு தீர்வு கண்ட வருவாய் துறைக்கும், ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கும், சிபிஎம் திருத்தணி வட்டக்குழு பாராட்டு தெரிவித்துள்ளது.