districts

img

மெட்ரோ ரயில் சுரங்கம் அமைக்கும் பணி

சென்னை, செப். 1- மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டம் - 2, வழித்தடம் 4இல் ஃ பிளமிங்கோ என்று பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் கலங்கரைவிளக்கத்தில் சுரங்கம் அமைக்கும் பணியை திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் ரயில் சேவையை சென்னையில் துவங்கியது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டம் 1 மற்றும் கட்டம் 2 நீட்டிப்புக்கு பிறகு வழித்தடம் 1 மற்றும் 2இல் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2இல் 116.1 கி.மீ. நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களில் 119 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரு கின்றது. சென்னை மெட்ரோ ரயில் திட்டம்  கட்டம் 2 வழித்தடம்  கலங்கரைவிளக்கத்தில் இருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கி.மீ. நீளத்தில் 9 சுரங்கப்பாதை ரயில் நிலையங்களும், 18 உயர்மட்ட ரயில் நிலையங்களும் அமைக்கப்படவுள்ளது. இதில் மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் மெட்ரோ நிலை யத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வரை பணிகள் நடை பெற்று வருகிறது. வழித்தடம் 4 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்கள் 10 கி.மீ. நீளத்திற்கு, கலங்கரை விளக்கத்தில் தொடங்கி, சென்னை யின் பழமையான பகுதிகளான மயி லாப்பூர், கச்சேரிசாலை வழியாக ஆழ்வார்பேட்டை, பாரதிதாசன் சாலை, போட்கிளப், பனகல் பார்க் மற்றும் கோடம்பாக்கம் போன்ற பகுதிகளுக்கு செல்கிறது. இந்த வழித்தடத்தில் சுரங்கப்பாதை பகுதிகள் இரண்டு தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த வழித்தடத்தில் நாங்கு சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.  ஃபிளமிங்கோ (எந்திரங்க ளுக்கு பறவைகளின் பெயரிடப் பட்டுள்ளது) மற்றும் கழுகு கலங்கரை விளக்கத்தில் இருந்தும், மயில் மற்றும் பெலிகன் பனகல் பூங்காவில் இருந்தும் சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கும். மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டம் 2, வழித்தடம் 4இல் சுரங்கப் பாதை கட்டுமான பணிகளில், முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரம்ஃபிளமிங்கோ கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை மெட்ரோ வரை 1.96 கி.மீ. நீளத்திற்கு சுரங்கம் அமைக்கும் பணியை வெள்ளிக்கிழமை (செப். 1) சென்னை மெரினா கடற்கரை அருகில் கலங்கரைவிளக்கத்தில் தொடங்கியுள்ளது. இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரம் வழித்தடம் 4 இல் பூமிக்கு அடியில் 30 மீட்டர் ஆழத்தில் கீழ்நிலையில் கலங்கரை விளக்கத்தில் தொடங்கப்பட்டு கச்சேரி சாலை வழியாக திரு மயிலை நிலையத்தை ஒருவருட காலத்தில் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர், ஆழ்வார்பேட்டை, பாரதிதாசன் சாலை,போட்கிளப், பனகல்பார்க் மற்றும் கோடம்பாக்கம் வழியாக சுரங்கம் தோண்டப்பட்டு இறுதி யாக மே 2026இல் போட் கிளப்பை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரி வித்தார்.