districts

img

சனாதனத்தை முன்நிறுத்த அரசியலமைப்பு சட்டத்தை பாஜக சீர்குலைக்கிறது தமுஎகச மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் பேச்சு

சென்னை, ஆக. 11-

     சனாதனத்தை முன்நிறுத்த அரசிய லமைப்பு சட்டத்தை பாஜக சீர்குலைக்கிறது என தமுஎகச மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

     தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க வடசென்னை மாவட்டக்குழு சார்பில் “சனாதனத்தின் வேர்களும் விளைவு களும்” என்ற தலைப்பில் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் தளவை ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

    மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் பேசுகையில், சனாதனம் என்பது மனு தர்மத்தை நடைமுறைப்படுத்தி, மக்களை பிளவுபடுத்தும் நான்கு வருணாஸ்ரம தர்மங்களை சட்ட ரீதியாக மீண்டும் கொண்டு வருவதாகும். சனாதனம் என்பது தீண்டா மையைக் கடைப்பிடிப்பது, பெண்களுக்கு எதிரானது. சனாதனம் பெண்கள் மார்பை மறைக்கும் துணி அணியக்கூடாது என்றும், உடன்கட்டை ஏறுவதையும், குழந்தை திருமணத்தையும் ஊக்குவிக்கிறது.

   சனாதனம் விதவை திருமணத்திற்கு, பெண்களுக்கு சமஉரிமை, சொத்துரிமைக்கு எதிரானது மட்டுமல்ல சமத்துவத்திற்கு எதி ரானது. சனாதனத்திற்கு எதிரான இந்திய தண்டனைச் சட்டங்களும், அரசியலமைப்பு சட்டமும் தான் தற்போது நாட்டையும், நாட்டு  மக்களையும் காப்பாற்றி வருகிறது. அதனால் தான் ஒன்றிய பாஜக அரசு அரசியலமைப்பு சட்டத்தை ஒழித்து கட்ட நினைக்கிறது.

    சனாதனம் தொழிலாளி வர்க்கத்திற்கு எதிரானது. அதனால் தான் தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தி அமைக்கிறார்கள். இட ஒதுக்கீட்டுக்கு எதிரானது சனாதனம். அதனால்தான் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குகிறார்கள்.

    சனாதனத்தின் உட்கூறுகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் நம் முன் உள்ளது. அதையொட்டிதான் அக்டோபர் 2 இல் சென்னையில் சனாதான எதிர்ப்பு மாநாடு நடைபெறுகிறது என்றார்.

   முன்னதாக மாநிலக்குழு உறுப்பினர் பா.ஹேமாவதி நோக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் மணிநாத் வரவேற்றார்.  பொருளாளர் வி.உமாநந்தன் நன்றி கூறினார்.