சென்னை, ஜூலை 22- சென்னையில் ஜூலை 25 முதல் 27 வரை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மைய அரங்கில் வாய் மற்றும் முக சீரமைப்பு அறுவை சிகிச்சை நிபுணர்களின் 16வது ஆசிய மாநாடு நடைபெறவுள்ளது. இந்திய வாய் மற்றும் முக சீரமைப்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் நிர்வாகியும் மாநாட்டு அமைப்புச் செயலாளருமான பேராசிரியர் டாக்டர் குணசீலன் ராஜன் இதனைத் தெரிவித்தார். இந்த சர்வதேச மாநாடு வாய் புற்றுநோய் உட்பட முக அறுவை சிகிச்சையின் முக்கியமான தலைப்புகளில் கவனம் செலுத்தும் என்றனர். உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து புகழ்பெற்ற பேச்சாளர்கள் மற்றும் வல்லுநர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள். இந்த மாநாட்டில் ஆசியா முழுவதிலும் இருந்து கிட்டத்தட்ட 1,800 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். வாய் புற்றுநோய், முக காயங்கள், உதடு பிளவு மற்றும் அண்ணம் பிளவு போன்ற பிறவிப் பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு தீவிரமான உடல்நலப் பிரச்சினைகளை தீர்க்க புதிய உத்திகளைப் பற்றி விவாதிக்க உள்ளனர். செய்தியாளர் சந்திப்பில் மூத்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர். எம். வீரபாகு, டாக்டர் நா. நந்தகுமார் மற்றும் டாக்டர் இளவேனில் ஆகியோர் உடனிருந்தனர்.