தமிழகத்திலிருந்து இயக்கப்படும் முதல் (கோவை சீரடி) தனியார் ரயில் இயக்கத்தை கண்டித்தும், அந்த தனியார் ரயிலை ரயில்வே துறையே இயக்கக் கோரியும் ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில் வில்லிவாக்கம் ரயில் நிலையம் அருகே தலைவர் எஸ்.ராமலிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை, சங்கத்தின் பொதுச்செயலாளர் பா.ராஜாராமன், ஆர்.அசோக்குமார் ஆகியோர் பேசினர்.
சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம் அருகே ஒர்க்ஷாப் டிவிசன் தலைவர் எதுகிரி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தலைவர் பார்த்தசாரதி, துணைச் செயலாளர் ஜிஜோனி, இணை பொதுச் செயலாளர் வெங்கட்ராமன், ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச்செயலாளர் பா.ராஜாராமன், சிஐடியு மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தமிழகத்திலிருந்து இயக்கப்படும் முதல் தனியார் ரயில் இயக்கத்தை (கோவை சீரடி) கண்டித்தும், அந்த தனியார் ரயிலை அரசே இயக்கக் கோரியும், ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவாக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்தும் டிஆர்இயூ சார்பில் ஆம்பூர் ரயில் நிலையம் அருகே செவ்வாயன்று (ஜூன் 14) கிளைச் செயலாளர் சங்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் பொதுச்செயலாளர் வி.அரிலால், மணிமாறன், இளங்கோவன், தமிழ்மாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் கிளைச் செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் செயல் தலைவர் து.ஜானகிராமன், முன்னாள் செயலாளர் எம்.காசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதேபோல் விருத்தாசலம், விக்கிரவாண்டி, அரக்கோணம் உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.