கள்ளக்குறிச்சி, நவ.12- சங்கராபுரம் பகுதியில் அதிகரித்து வரும் சட்டவிரோத மதுபான விற்பனையை முற்றிலும் ஒழிக்க வலியுறுத்தியும் கள்ளச்சாராய வியாபாரிகளை கைது செய்ய வேண்டியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் ஒன்றியம், கொசப்பாடி கிராமத்தில் 2500 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில், இளைஞர்களை தொடர்ந்து சீரழிக்கும் சட்டத்திற்கு எதிராக மதுபானம் மற்றும் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்துவருகிறது. பலமுறை காவல்துறையிடம் முறையிட்டும் நட வடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கொசப்பாடி கிளைத் தலைவர்கள் காவல் நிலையத்தில் மனு கொடுத்தனர். இளைஞர்களை சீரழிக்கும் மதுபான வியாபாரிகளை உடனடியாக கைது செய்து இளைஞர்களை பாதுகாக்க வேண்டும் என்று அதில் வலியுறுத்தியுள்ளனர்.