புதுச்சேரி, செப்.29- அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகை கால உதவி தொகை ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும் என்று புதுச்சேரி அரசை சிஐடியு வலியுறுத்தியுள்ளது. புதுச்சேரி மாநில தையல் கலைஞர்கள் சங்கம் (சிஐடியு) மாநிலக் குழு கூட்டம், மாநிலத் தலைவர் மணிபாலன் தலைமையில் நடைபெற்றது. சிஐடியு மாநிலச் செயலாளர் சீனுவாசன், தையல் சங்கத்தின் கவுரவத் தலைவர் தியாகராஜன், செயலாளர் அப்துல் பஷீர், பொருளாளர் காயத்ரி நிர்வாகிகள் ரேவதி,நீலா, முருகன்,சிவசங்கரி மற்றும் மாநிலக் குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். தீர்மானங்கள் புதுச்சேரி அரசின் தொழிலாளர் நலத்துறை கீழ் இயங்கும் அமைப்பு சாரா தொழிலாளர் நலச்சங்கத்தை வாரியமாக மாற்றம் செய்து அரசாணையை உடனே அமல்படுத்த வேண்டும். கட்டிட தொழிலாளர்களுக்கு பண்டிகை கால நிதி வழங்குவது போல், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகை கால உதவி தொகையாக ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.