districts

img

உர நிறுவனத்திற்கு எதிரான போராட்டத்தை அடக்க கிராம மக்களுக்கு பணம்!

சென்னை,ஆக.25- அமோனிய வாயு கசிவு ஏற்பட்ட கோர மண்டல் உர நிறுவனத்திற்கு எதிரான போராட்டத்தை அடக்க சென்னை எண்ணூரில் 4 கிராமங்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதை, ஒரு இணையதள ஊடகம் அம்பலப்படுத்தியுள்ளது.  தி நியூஸ் மினிட் (டிஎன்எம்)  என்ற  ஊடகத்தில் வந்த அறிக்கையைத் தொடர்ந்து,  பணம் கொடுக்கப்பட்டது குறித்து விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகம் (டிவிஏசி), வருமான வரி (ஐடி) துறை மற்றும் பிற பொருத்தமான  சுயேச்சையான அமைப்புகள் மூலம் விசாரணை நடத்தவேண்டும் என்று ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் கே.கண்ணன், டி.ஹரிபரந்தாமன் உள்ளிட்டோர் அடங்கிய குடிமக்கள் கூட்டமைப்பு, மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.  அவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், “உள்ளூர் காவல்துறை அல்லது வருவாய்த்துறை அதிகாரிகளுக்குத் தெரியாமல் இந்த வெட்கக்கேடான ஊழல் பேரம் நடந்திருக்க வாய்ப்பில்லை. அத்தகைய சாத்தியமில்லாத சூழ்நிலை இன்னும் கடுமையான நிர்வாக நெருக்கடியை மட்டுமே சுட்டிக்காட்டும் - இது ஒரு முக்கியமான உளவுத்துறை தோல்வியில் ஒன்றாகும். “தவறான செயல்களை அறிந்திருந்தும் நடவடிக்கை எடுக்கத் தவறினால் அல்லது பேசத் தவறினால், சுற்றுச்சூழல் கேடுகளுடன் சமரசம் செய்துகொண்டதாக ஆகிவிடும். கோரமண்டல் உரத்தொழிற்சாலைக்கு  (சிஐஎல்) ஆலைக்கு அருகாமையில் அமைந்துள்ள நான்கு மீனவ கிராமங்களுக்கு பணம் வழங்கப்பட்டதாக டிஎன்எம் தெரிவித்துள்ளது.  தாழங்குப்பம் மற்றும் நெட்டுக்குப்பம் ஆகிய நான்கு கிராமங்களில் இரண்டு கிராமங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாயும், பெரியகுப்பம் மற்றும் சின்னக்குப்பம் கிராமங்களுக்கு முறையே 50 லட்சம் மற்றும் 35 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனர். கிராமக் குழுவில் அங்கம் வகிக்கும் கிராமங்களில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் தலா 10,000 ரூபாயும், விதவைகளுக்கு தலா 5,000 ரூபாயும் வழங்கப்பட்டது. யார் பணம் கொடுத்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், திமுக எம்எல்ஏ கேபி சங்கர் நிறுவனத்துக்கும் மக்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்ததாக கிராம மக்கள் பலர் தெரிவித்தனர். ஆனால் இதனை எம்எல்ஏ முற்றிலுமாக மறுக்கிறார்.  2023 டிசம்பரில் 42 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அம்மோனியா வாயு கசிவைத் தொடர்ந்து,

100 நாட்களுக்கும் மேலாக அந்த ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய 33 கிராமங்களில் இந்த நான்கு கிராமங்களும் அடங்கும். ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று அவர்கள் கோரி வந்தனர். இருப்பினும், மே மாதம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு நிபந்தனையுடன் மீண்டும் திறக்க உத்தரவிட்டதையடுத்து, ஆகஸ்ட் 16 அன்று ஆலை பகுதி செயல்பாடுகளை மீண்டும் தொடங்கியது. ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் மீது திமுக அரசின் உறுதிப்பாட்டைக் கோரியுள்ள குடிமக்கள் அமைப்பு, “அதானி போன்ற பெரு நிறுவனங்களும், செபி போன்ற தேசிய கட்டுப்பாட்டாளர்களும் கார்ப்பரேட் நிறுவனங்களோடு உறவாடும் பிரச்சனை தேசியப் பிரச்சினையாக மாறிவிட்ட நிலையில், இதுபோன்ற குற்றச்சாட்டுகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. பணம் கொடுத்து முடிவுகளை வாங்குவது ஜனநாயகத்தை சீர்குலைப்பதற்கும், நமது அரசியலமைப்பை அவமதிக்கும் செயலாகும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவி, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்ஜி.தேவசகாயம், வழக்கறிஞர் ஹென்றி டிபேன், சிவில் உரிமைகளுக்கான மக்கள் சங்கத்தின் தேசிய பொதுச் செயலாளர் வி.சுரேஷ், வழக்கறிஞர் டி.நாகசைலா, தாமஸ் பிராங்கோ, எஸ்பி.உதயகுமார், அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசன் சமூக ஆர்வலரும் இசையமைப்பாளருமான டி.எம். கிருஷ்ணா, சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன், கல்வியாளர்கள் கல்பனா கருணாகரன், பிரின்ஸ் கஜேந்திர பாபு  ஆகியோரும் குடிமக்கள் அமைப்பில் இடம்பெற்றுள்ளனர்.