districts

சென்னை முக்கிய செய்திகள்

ஒலிம்பிக்போட்டியை காண உதயநிதி ஸ்டாலின் பாரிஸ் பயணம்

சென்னை, ஆக.8-  பாரீசில் நடைபெற்று வரும் 31 வது ஒலிம்பிக் போட்டிகளை நேரில் கண்டு ரசிப்பதற்காக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரான்ஸ்  சென்றுள்ளார். பாரீசில் ஜூலை 26 ஆம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் போட்டிகள் வரும்11 தேதி முடிவடைகிறது. தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 11 வீரர், வீராங்கனைகள் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ள நிலையில், ஒலிம்பிக் போட்டியை பார்வையிடவும் தமிழக வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் விளையாட்டு நிகழ்ச்சிகளை நேரில் பார்வையிட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசு துறை அதிகாரிகளுடன் பிரான்ஸ் சென்றுள்ளார். பிரான்ஸ் நாட்டில் 6 நாட்கள் தங்கி இருக்கும் அவர், பிரான்ஸ் பயணத்தை முடித்து ஆக.14ஆம் தேதி சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தாயை தாக்கிய தந்தையை  அடித்துக் கொன்ற மகன்

சென்னை, ஆக. 8- எர்ணாவூர் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் வீரய்யா (65). இவர் மணலி புதுநகரில் உள்ள தனியார் பள்ளியில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார்.  இவரது மனைவி நாகம்மாள் (55). இவர்களுக்கு 3 மகள்கள். ராஜேஷ் (38) என்ற மகன் உள்ளார். மகள்கள் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசிக்கின்றனர். ராஜேஷ் அதே பகுதியில் உள்ள செல்போன் கடையில் வேலை செய்து வருகிறார். புதன்கிழமை இரவு நாகம்மாள், ராஜேஷ் வீட்டில் இருக்கும் போது, குடிபோதையில் வந்த வீரய்யா நாகம்மாளிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் நாகம்மாவை தரக்குறைவாக பேசி, தாக்கி வீட்டிற்கு வெளியே தள்ளியுள்ளார். இதைக் கண்டு கோபமடைந்த ராஜேஷ் வீட்டில் இருந்த கட்டையை எடுத்துவந்து வீரய்யாவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பின் மண்டையில் பலத்த காயமடைந்த வீரய்யா சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எண்ணூர் காவல் துறையினர் வீரய்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவ காப்பீட்டிலும் வலுவாக  கால்பதிக்கும் சோழமண்டலம் எம்எஸ்

சென்னை, ஆக.8-  சோழமண்டலம் எம்எஸ் பொது காப்பீட்டு நிறுவனம் தனது ஆண்டு வணிகத்தில்  மோட்டார் காப்பீட்டு பங்களிப்பு   62 முதல் 63 விழுக்காடாக உள்ளது என்று நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். முருகப்பா குழுமம் மற்றும் ஜப்பானைத் தளமாகக் கொண்ட மிட்சுய் சுமிடோமோ இன்சூரன்ஸ் குழுமத்தின் கூட்டு முயற்சியான இந்நிறுவனம், பங்கு முதலீடுகளை அதிகரிக்க எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வி. சூர்யநாராயணன் தெரிவித்தார். இந்நிறுவனம் 2024 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான  காலாண்டில் ரூ. 1,945 கோடிக்கு பிரீமியத்தை பதிவு செய்துள்ளது. இது இந்த தொழில்துறையில் சராசரியான 12.4 சதவீதத்துடன் ஒப்பிடும்போது 14.3 சதவீத வளர்ச்சியாகும். நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் மோட்டார்  காப்பீட்டு பிரிவில் வலுவாக நிலையை அடையும் என்று கூறிய சூர்யநாராணயன், சுகாதார காப்பீட்டுத்துறையிலும் வலுவான வளர்ச்சியை எதிர்பார்க்கிறது என்றார். “இந்த ஆண்டின் இறுதிக்குள் மோட்டார் காப்பீட்டில் வணிக வாகன காப்பீடு 16 சதவீதமாக இருக்கும், சுகாதார காப்பீடு 17 சதவீதமாக இருக்கும் மற்றும் பயிர் கடன் ஓரளவு வளர்ச்சியை தொடும்,” என்றும் அவர் கூறினார்.

தங்கம் விலை மீண்டும் உயர்வு

சென்னை, ஆக. 8- சென்னையில் புதனன்று ஒரு சவரன் தங்கம் ரூ.50,640க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் வெள்ளி காலை ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.50,800க்கு, ஒரு கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.6,350-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளியின் விலை கிராமுக்கு 50 பைசா குறைந்து ரூ.86.50-க்கும், ஒரு கிலோ ரூ. 86,500க்கும் விற்பனையாகி வருகிறது.

800 கிலோ கெட்டுப்போன மாட்டிறைச்சி பறிமுதல்

சென்னை, ஆக. 8- உணவகங்களில் கெட்டுப்போன இறைச்சியை பயன்படுத்தி உணவு சமைக்கப்படுவதாக எழுந்த புகார் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னை செனாய் நகரில் உள்ள உணவுப் பதப்படுத்தும் இடத்தை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் தலைமையில் வியாழனன்று (ஆக.8) ஆய்வு செய்தனர். அப்போது அங்கு கெட்டுப்போன நிலையில் இருந்த 800 கிலோ மாட்டிறைச்சி பதப்படுத்தப்பட்டுள்ளதை கண்டுபிடித்தனர்.இந்நிலையில், இறைச்சிகளை பறிமுதல் செய்து மாநகராட்சி ஊழியர்கள் மூலம் அப்புறப்படுத்தினர்.மேலும் அனுமதி இன்றி செயல்பட்டு வந்த கடைக்கு சீல் வைத்தனர்.

இந்திய மருத்துவ பிரிவை உருவாக்கி  மருத்துவர்களை அதிகாரிகளாக நியமிக்க வேண்டும் டாக்டர் கலாநிதி வீராசாமி எம்பி கோரிக்கை

சென்னை, ஆக. 8- இந்திய மருத்துவ பிரிவை உருவாக்கி மருத்துவர்களை அதிகாரிகளாக நியமிக்க வேண்டும் என்று மக்களவையில் டாக்டர் கலாநிதி வீராசாமி எம்பி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து வடசென்னை மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி பேசுகையில், நமது நாட்டில் ஒன்றிய பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மூலம் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ்ஐ, ரயில்வே சர்வீஸ் என 20க்கும் மேற்பட்ட துறைகளுக்கு அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அதுபோல் மக்களுக்கு மிக முக்கிய துறையாக உள்ள மருத்துவத்துறைக்கு என்று இந்தியன் மெடிக்கல் சர்வீஸ் என்று ஒரு பிரிவை உருவாக்கி எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் போன்ற மருத்துவக் கல்வி பயின்றவர்களைத் தேர்ந்தெடுத்து மருத்துவத்துறை அதிகாரிகளாக நியமனம் செய்ய வேண்டும் என்று பல ஆண்டுகளாக மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்கள் கோரி வருகின்றனர். மருத்துவம் தவிர்த்து வேறு கல்வி பயின்ற அதிகாரிகளை மருத்துவத்துறை அதிகாரிகளாக நியமிக்கும் போது அவர்களுக்கு மருத்துவம் சம்பந்தப்பட்ட விவரங்கள் குறித்த புரிதல் இல்லை. எனவே அவர்கள் மேற்கத்திய நாடுகள் பின்பற்றும் மருத்துவ அளவீடுகளையே உதாரணத்திற்கு சர்க்கரை வியாதி முதலானவற்றுக்கே மேற்கத்திய நாடுகளின் அளவீடுகளையே பின்பற்றுகின்றனர். குளிர் தேசங்களான மேற்கத்திய நாடுகள் வைட்டமின் டி குறித்து வைத்துள்ள அள வீடுகளை வெப்ப நாடான நம் நாட்டிற்கும் பின்பற்றுகின்றனர். மருத்துவத் துறைக்கு சேத விகிதம் நிதி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்ட போதிலும் கூட இத்துறைக்கு பட்ஜெட்டில் 2 விழுக்காடு அளவிற்கு நிதி ஒதுக்கப்படுகிறது. இதுபோன்ற பிரச்சனைகளை புரிந்து கொள்ள வேண்டிய நிலையில் அதி காரிகள் இருந்தால்தான் இந்த குறைகள் நிவர்த்தி செய்யப்படும். எனவே, இந்திய மருத்துவத்துறை என்று ஒரு பிரிவை உருவாக்கி மருத்துவக் கல்வி பயின்றவர்களைத் தேர்ந்தெடுத்து மருத்துவத்துறைக்கு அதிகாரிகளாக நியமனம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கலாநிதி வீராசாமி எம்பி பேசினார்.

ஓசூர் கால்நடை பண்ணையில்  42 ஆடுகள் திருட்டு

கிருஷ்ணகிரி, ஆக.8- கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், மத்திகிரியில் ஆசியாவிலேயே மிகப்பெரிய அரசு கால்நடை பண்ணை 1,641 ஏக்கர் பரப்பில் உள்ளது. அங்கு மாடு, ஆடு, கோழி உள்ளிட்ட பல்வேறு வகை உயர் இன கால்நடைகள் வளர்க்கப்படுகிறது. இந்த பண்ணைக்கு சுற்றுச்சுவர்கள் கிடை யாது. சில இடங்களில் வேலி கூட இல்லை. திறந்தே கிடப்பதால் பண்ணைக்குள் புகுந்து மது குடிப்பது, சீட்டு விளையாடுவது என சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வரு கின்றனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பண்ணைக்குள் புகுந்து மர்ம நபர்கள் சுமார் ரூ. 6 லட்சம் மதிப்புள்ள 42 ஆடுகளை திருடி சென்றுள்ளனர். இது குறித்து துணை இயக்குநர் கால்நடை மருத்து வர் சக்திவேல் பாண்டி, மத்திகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புதுச்சேரியில் ஆக.19 மக்கள் குறைதீர் கூட்டம்

புதுச்சேரி, ஆக.8 - புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:- மாவட்ட மக்களின் குறைகளை தீர்ப்பதற்கு அனைத்து துறை அதிகாரிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில், ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி பொதுமக்கள் குறை தீர்ப்பு தினம் கடைபிடிக்கப்பட உள்ளது.   வருகிற 15ஆம் தேதி அரசு விடுமுறை நாளாக இருப்பதால் அடுத்த அலுவலக நாட்களில் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறும். இந்த மாத பொது மக்கள் குறை தீர்ப்பு தினம் வருகிற 19ஆம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு வழுதாவூர் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  தரைத்தளத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

பொது விநியோகம் குறைதீர்  முகாம்

ராணிப்பேட்டை, ஆக.8 - ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டம் சிறப்பு முகாம் ஆக. 10 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அந்தந்த வட்டாட்சியர் அலு வலகத்தில் நடைபெறுகிறது. இந்த முகாமில் மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல், தொலைபேசி எண் மாற்றம், புதிய ரேஷன் கார்டு மற்றும் நகல் அட்டை கோருதல் போன்ற குறைகள் சரி செய்து வழங்கப்பட உள்ளது. மேலும் மின்னணு குடும்ப அட்டைகளில் உள்ள தவறான குடும்பத் தலைவர் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பின் முகாமிலேயே புகைப்படம் பதி வேற்றம் செய்து திருப்பி தரப்படும். இது தவிர பொது விநி யோகத் திட்டம் தொடர்பான குறைகளையும் தெரிவித்து பொதுமக்கள் பயன் பெறலாம். பொது மக்கள் குறைகள் இருப்பின் இந்த சிறப்பு முகாமில் மனு செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

250 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு

ராணிப்பேட்டை, ஆக.8 -  ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் பூட்டுத்தாக்கு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் வியாழனன்று (ஆக.8) சமுதாய வளைகாப்பு நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் 250 கர்ப்பிணிகளுக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி சீர்வரிசை தட்டுகள் வழங்கினார். மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, ஒன்றியக் குழுத் தலைவர் புவனேஸ்வரி சத்தியநாதன், துணைத் தலைவர் ஸ்ரீமதி நந்தகுமார், ஒன்றியக் குழு உறுப்பினர் செல்வி. தீபிகா இளவழகன், ஊராட்சி மன்றத் தலைவர் அருண் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உளுந்தூர்பேட்டை அருகே  மான் வேட்டை: மூன்று பேர் கைது

கள்ளக்குறிச்சி, ஆக. 8 - கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசூர்கோட்டை பகுதியில் கோட்டையூர் பரிந்தல் சாலையில் காவல்துறையினர்  வாகன தணிக்கை யில் ஈடுபட்டனர்.  அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரை காவல்துறையினர் நிறுத்தினர். ஆனால். வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக  செல்ல முயன்ற னர். விரட்டி சென்று அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.  அப்போது, மூன்று பேரும் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு காப்புக்காடு பகுதியில் மான் வேட்டையாடி, அதன் இறைச்சியை சாக்குப் பையில் போட்டு எடுத்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த காவல்துறையி னர், துப்பாக்கி மற்றும் ரூ. 2 லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மின்சாரம் பாய்ந்து மாணவர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி, ஆக.8-  கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே திம்மசந்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நரசிம்மன். அவரது மகன் ருத்ரமூர்த்தி 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேர்வதற்கு காத்திருந்தார்.  இந்த நிலையில், வீட்டுக்கு அருகே உள்ள ஆழ்துளை கிணற்றில் மின் மோட்டார் இயக்க முயன்றார். அப்போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து வேப்பனப்பள்ளி காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.