districts

செங்கல்பட்டு, திருப்பத்தூரில் எஸ்பி அலுவலங்கள் திறப்பு

சென்னை, மே 19-

   செங்கல்பட்டில் ரூ. 12 கோடியே 25 லட்சத்திலும், ராணிப்பேட்டையில் 12 கோடியே 3 லட்சம் ரூபாய் செலவிலும், திருப்பத்தூரில் 12 கோடியே 11 லட்சம் ரூபாய் செலவிலும் புதிதாக கட்டப்பட்டுள்ள மூன்று மாவட்ட காவல் அலுவலக கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.  

    இம்மாவட்ட காவல் அலுவலகக் கட்டிடங்கள் தரை மற்றும் 3 தளங்களுடன் சுமார் 4,245 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடத்தில் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அறை, மாவட்ட காவல் துணை கண்காணிப் பாளர் அறைகள், கட்டுப்பாட்டு அறை, பொது மக்கள் காத்திருப்பு அறை, உணவருந்தும் கூடம், அலுவலக அறைகள், தீயணைப்பு கருவிகள் போன்ற வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.  

   அதனைத் தொடர்ந்து, இரண்டாம் நிலை காவலர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 2617 ஆண்கள் மற்றும் 654 பெண்கள், என மொத்தம் 3271 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 10 பேருக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.