districts

img

சிபிஎம் போராட்டம் வெற்றி! அனகாபுத்தூர் வழியாக மீண்டும் பேருந்து இயக்கம்

சென்னை, செப். 30 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத்தை அடுத்து அனகாபுத்தூர் வழியாக மீண்டும் பேருந்துகள் இயக்கப்படுகிறது. பல்லாவரம் - குன்றத்தூர் சாலை சுமார் 7 கிலோ மீட்டர் நீளம் உள்ளது. இந்த சாலையை அகலப்படுத்தும் பணி கிடப்பில் கிடக்கிறது. இதனால் சாலையில் எந்நேரமும் வாகன நெரிசல் உள்ளது. குறிப்பாக அனகாபுத்தூர் பகுதியில் ஒரு இடத்தை கடக்க நீண்ட நேரமாகிறது. இந்த நிலையில், பல்லாவரம் - குன்றத்தூர் இடையே இயக்கப்படும் பேருந்துகள், பம்மலில் இருந்து திரும்பி, மதுரவாயல் புறவழிச் சாலையின் அணுகுச் சாலை வழியாக குன்றத்தூருக்கு செல்கிறது. இதனால் அனகாபுத்தூர் மக்கள் பேருந்து இன்றி மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். எனவே, பல்லாவரம் - அனகாபுத்தூர் சாலையை விரைந்து அகலப்படுத்த வேண்டும். அனகாபுத்தூர் வழியாக மீண்டும் பேருந்துகளை இயக்க வேண்டும் என வலியுறுத்தி செப்.26 அன்று அனகாபுத்தூர் நூலகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் எதிரொலியாக திங்கட்கிழமை (செப்.30) முதல் அனகாபுத்தூர் வழியாக மீண்டும் பேருந்து  இயக்கப்படுகிறது.