கள்ளக்குறிச்சி, ஜூன் 10-
உளுந்தூர்பேட்டை அருணகிரியார் தெருவில் வசிப்பவர் முருகன் (45). இவர் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜமுனா (40). உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு முருகனும், ஜமுனாவும் வெள்ளிக்கிழமை இரவு சென்றனர். இவர்களது மகன்களை அருகில் உள்ள உறவினர் வீட்டில் விட்டு விட்டுச் சென்றனர். இந்நிலையில் சனிக்கிழமை காலை அந்த வழியாகச் சென்றவர்கள் முருகன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து உறவினர் வீட்டில் இருந்த முருகன் மகன்களிடம் தெரிவித்தனர். அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 சவரன் நகை, அரை கிலோ வெள்ளி பொருட்கள், 50 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.