புதுச்சேரி, ஜூலை1- புதுச்சேரியில் முதல்வர் ரங்க சாமிக்கு எதிராக பாஜக மற்றும் பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதால் முதல்வர் ரங்கசாமி மாநில பாஜக தலைவரை அழைத்துப் பேசினார். புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் - பாஜக கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. கூட்டணி ஆட்சி என்ற போதிலும் பாஜக வைத்ததுதான் சட்டம் என்ற நிலை நீடிக்கிறது. அமைச் சர் பதவி இல்லாத பாஜக எம்எல்ஏக்கள் வாரியத் தலைவர்கள் பதவி கேட்டு ரங்கசாமியை நச்சரித்தனர். ஒரு கட்டத்தில் தங்களுக்கு அமைச்சர் பதவியும் கேட்டு வந்தனர். மக்க ளவைத் தேர்தலுக்கு பிறகு ரங்கசாமி மீதும் அமைச்சர்கள் மீதும் பாஜக எம்எல்ஏக்கள் சிலர் குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். சிலர் ஆளுநர் மாளிகை சென்று துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் இந்த புகார்களை தெரிவித்தனர். இவர்களுடன் பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏக்களும் சென்றிருந்தனர். அந்தப் புகைப்படங்களை ஆளுநர் மாளிகை வெளியிடவில்லை. பாஜக எம்எல்ஏக்களும் அப்புகைப்படங்களை வெளியே தரவில்லை. அதில் உச்சக்கட்டமாக இச்சந்திப்பு தொடர்பாக பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ அங்காளன் நேரடியாக முதல்வர் மீது ஆளுநரிடம் குற்றம் சுமத்தியதாக தெரிவித்திருந்தார். குறிப்பாக, எம்எல்ஏக்கள் கூட்டத்தை முதல்வர் நடத்துவதில்லை. ரெஸ்டோ பார்கள் அதிகரித்துள்ளன. ரேசன் கடையை திறக்கவில்லை. குப்பை வாருவதில் ஊழல் உள்ளது. பாஜக அமைச்சர்களை மாற்றவேண்டும் என அவர் கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் அங்காளனுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தலாம் என முடிவு எடுத்தனர். ஆனால் பாஜக மேலிடம் கோபித்துக்கொண்டு ஏதாவது செய்துவிட்டால் என்ன செய்வது என போராட்டத்திற்கு ரங்கசாமி தடை போட்டுவிட்டார். இந்நிலையில், புதுச் சேரி சட்டப்பேரவை வளாகத்தில் திங்களன்று முதல்வர் ரங்கசாமி வந்தவுடன் பாஜக மாநிலத்தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான செல்வகணபதி வந்தார். அதைத் தொடர்ந்து பேரவைத் தலைவர் செல்வம், என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகி யோர் முதல்வர் அறைக்கு சென்றனர். சுமார் ஒரு மணிநேரம் பேசினார்கள். இது தொடர்பாக பாஜக வட்டாரங்களில் விசாரித்தபோது, “ராஜ்நிவாஸ் சென்று பாஜக மற்றும் ஆதரவு சுயேட்சை எம்எல்ஏக்கள் ஆளுநரை சந்தித்து தன்னை குறைக்கூறியது தொடர்பாக பாஜக மாநிலத் தலைவரிடம் முதல்வர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினாராம். ஆதரவு சுயேட்சை எம்எல்ஏவக்கு கார் வாங்கித்தந்ததோடு எப்படியெல்லாம் குஷிபடுத்தி வைத்திருக்கிறேன் என்றெல்லாம் சொன்னாராம். இவ்வளவு செய்தபின்னரும் அவர்கள் என்மீது குற்றம்சாட்டுகிறார்களே என்று வேதனைபட்டாராம். இதுபற்றி கட்சி மேலிடத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று செல்வ கணபதியிடம் ரங்கசாமி கேட்டுக் கொண்டாராம். இந்நிலையில், பாஜக மற்றும் ஆதரவு சுயேட்சை எம்எல்ஏக்கள் இப்பிரச்சினை தொடர்பாக பாஜக தலைவர் நட்டா, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை சந்திக்க டில்லி செல்ல திட்டமிட்டுள்ளனர். எனவே புதுச்சேரியில் நடைபெறும் பதவிச் சண்டை இப்போதைக்கு முடிவுக்கு வரவாய்ப்பில்லை.