திருவள்ளூர், ஆக 16- கடம்பத்தூர் ஊராட்சி, ஆற்றங்கரையில் வசிக்கும் இருளர் இன மக்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்ட ஆணைகள் வழங்கி நான்கு மாதங்கள் ஆகியும், தொகுப்பு வீடுகள் கட்டப்படவில்லை. கடம்பத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆற்றங்கரையோரம் இருளர் இனத்தைச் சேர்ந்த 20 குடும்பங்கள் கடந்த 15 ஆண்டு களுக்கு மேலாக வாழ்ந்து வரு கின்றன. இவர்களுக்கு குடிநீர், குடிமனை பட்டா, மின்சாரம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதி யும் இல்லாமல் தவித்து வந்தனர். ஆற்றங்கரை பகுதியிலேயே குடி மனை பட்டா வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் போராடினர். மாவட்ட நிர்வாகம் மாற்று இடத்தில் வழங்குவதாக கூறியது. இதற்காக ஆர்ப்பாட்டம், காத்திருக்கும் போராட்டம் என தொடர் போராட்டத்தின் விளைவாக 20, குடும்பங்களுக்கும் தலா 2 சென்ட் வீதம் அருகில் உள்ள தொடுகாடு ஊராட்சியில் குடிமனை பட்டாக்களை வழங்கினர். பட்டாக்களை பெற்ற பிறகு தொகுப்பு வீடுகள் வழங்க வேண்டும் என பல ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.போராட்டத்தின் விளைவாக 14 குடும்பங்களுக்கு மட்டும் 269 சதுர அடியில் ரூ. 4 லட்சத்து 37 ஆயிரத்து 430 மதிப்பீட்டில் தொகுப்பு வீடுகள் வழங்குவதற்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். குடிமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சா.மு.நாசர் பேசுகையில், குடிமனை பட்டா 20 குடும்பங்களுக்கும் வழங்கி இருக்கிறோம். தொகுப்பு வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, பால் பொங்கும் நிகழ்ச்சிக்கு வரு கிறேன் என உறுதியளித்தார். இதனை மாவட்ட நிர்வாகம் நிறைவேற்ற வேண்டும். மற்றும் கடம்பத்தூர் ஆற்றங்கரையில் உள்ள நரசம்மாள், வெண்ணிலா, ஏழுமலை, ராணி, செஞ்சிலட்சுமி, கண்ணம்மாள் ஆகிய 6 குடும்பத்திற்கும் தொகுப்பு வீடுகள் வழங்காமல் விடுபட்டுள்ளது. இவர்களுக்கும் தொகுப்பு வீடுகள் கட்ட ஆணைகள் வழங்க வேண்டும். தொகுப்பு வீடுகள் கட்ட ஆணை கள் வழங்கி நான்கு மாதங்கள் கடந்த பிறகும் கட்டுமான பணிகள் தொடங்காமல் உள்ளது. இதனை உடனடியாக துவங்க வேண்டும். மேலும் ஆதார், குடும்ப அட்டை, நூறு நாள் வேலை அட்டை ஆகியவை எப்படி பெறுவது என்ற விவரம் தெரியாமல் உள்ள இருளர் இன மக்களுக்கு என முகாம் நடத்தவேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழ்அரசு வலியுறுத்தியுள்ளார்.