districts

img

கான்கிரீட் பில்லர் அமைக்காமல் கலைஞர் கனவு இல்லம் திட்டம்

திருவள்ளூர், அக் 14- கான்கிரீட் பில்லர்கள் அமைக்காமல் கட்டும் கலைஞர் கனவு இல்லம் திட்டம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வலி யுறுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம்  ஆர்.கே.பேட்டை ஒன்றியம் கோபாலபுரம் ஊராட்சி மற்றும் எஸ்.பி.ஜி. புரம் ஊராட்சி எஸ்.பி.கண்டிகையில்  மொத்தம் ஏழு பழங்குடி குடும்பங்களுக்கு 2024 -25 ஆம் ஆண்டிற்கான கலைஞர் கனவு இல்லம் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வீட்டிற்கும்  ஒன்பது கான்கிரீட் பில்லர்கள் எழுப்பி அதன் பிறகு கட்டடம் கட்டப்பட வேண்டும் என்று பணி மேற்பார்வையாளர்  வீட்டின் வரைபடத்தை அந்த மக்களிடம் கொடுதுள்ளனர். ஆனால் பில்லர் அமைக்காமல் வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இது மிகவும் ஆபத்தானது.  இருளர் இன மக்கள் என்றாலே அதிகாரி கள் ஏளனமாக நடத்துகின்றனர். அரசின் எந்த சலுகைகளும் கிடைப்பதில்லை. குடிமனை பட்டா, தொகுப்பு வீடுகள், குடி நீர் என அடிப்படை தேவைகள் கூட பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு தான் கிடைக்கிறது. அப்படி கிடைத்தாலும் முழு பலனும் கிடைப்பதில்லை. அந்த திட்டத்திலும் ஏராளமான முறைகேடுகள் நடைபெறுகிறது. இது குறித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு தெரிவிக்கையில், கலைஞர் கனவு இல்லம் கட்ட ஒதுக்கப்படும் நிதி யில் கான்கிரீட் வீடு கட்ட முடியாது. இதிலும் முறைகேடுகள் நடந்தால் வீடுகள் தரமாக கட்ட முடியாது.  கான்கிரீட் பில்லர் அமைக்காமல் வீடு கட்டுவது எந்த நேரத்திலும் சேதமடைய வாய்ப்புள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலர் இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  பழங்குடி மக்களுக்கு என்று வழங்கப்படும்  பிஎம் ஜென்மன் திட்டத்தில் ரூ.5 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீடு திட்டத்தில் வீடுகள் கட்ட வழங்க வேண்டும். கலைஞர் கனவு இல்லம் திட்டத்திற்கு மதிப்பீடு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். அனைத்து வீடுகளையும் கான்கிரீட் பில்லர்கள் எழுப்பிய பிறகு  கட்டுவதை உறுதி செய்ய வேண்டும். மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை செய்து பழங்குடி மக்களின் நலன் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.