புதுச்சேரி, மார்ச் 11- பொது வேலைநிறுத்தத்தில் புதுச்சேரி அரசு ஊழியர்கள் பெரும் திரளாக பங்கேற்க முடிவு செய்துள்ளனர். அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்க வேண்டும், பொதுத்துறை நிறுவன பங்குகள் விற்பனையை கைவிட வேண்டும், விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு ஆயத்த கருத்தரங்கம் அரசு ஊழியர் சம்மேளனம் சார்பில் புதுவையில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்திற்கு அரசு ஊழியர் சம்மேளன தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். இந்திய வங்கி ஊழியர் சம்மேளன முன்னாள் நிர்வாகியும், கடலூர் மாவட்ட குடியிருப்போர் நலச்சங்க தலைவருமான மருதவாணன் கலந்து கொண்டு பேசினார். சம்மேளன பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் கிறிஸ்தோபர் உள்ளிட்ட இணைப்பு சங்கத்தின் தலைவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக இரண்டு நாள் நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தில் புதுச்சேரி அரசு ஊழியர்கள் பங்கேற்று வெற்றி பெறச் செய்ய தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.