districts

img

100 நாள் வேலை திட்டத்தை இழக்கும் ஆபத்து!

திருவண்ணாமலை,ஜுலை 7- திருவண்ணாமலை நகரத்தை சுற்றியுள்ள 18 கிராம ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைப்பதால் 100 நாள் வேலை திட்டத்தை இழக்கும் நிலை ஏற்படும் என்று அந்த கிராமங்களின் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலை நகராட்சி 1959 ஆம் ஆண்டு இரண்டாம் தர நகராட்சியாகவும்,  1974 இல் முதல் தர நகராட்சியாகவும் செயல்பட்டு வந்தது.  தற்போது 2024 மார்ச் மாதம் முதல் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது.  தற்போது நகராட்சியாக உள்ள திருவண்ணாமலை நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு போதுமான இடம் இல்லை.  ஈசானிய மைதானத்தில் கொட்டப்படும் குப்பைகள் பல நேரங்களில் தீப்பிடித்து எரிந்து நாள் கணக்கில், வார கணக்கில் புகை பரப்பி ஆபத்தை ஏற்படுத்தி வரு கிறது. பாலியப்பட்டு கிராமம் மலையடிவாரத்தில் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதால் கிராம மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாவதாக குற்றச்சாட்டு தெரி வித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.   தனிநபர் கழிப்பறை திட்டத்தில் முறைகேடு திருவண்ணாமலை அருகே உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் தனி நபர் கழிவறை அமைக்கப்படவில்லை. தனிநபர் கழிவறை திட்டத்தில் பல முறைகேடு நடந்துள்ளது. அனைவருக்கும் தனிநபர் கழிவறை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவண்ணாமலை நகருக்கு ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் தற்போதுதான் அமைக்கப்பட்டு வருகிறது.   திருவண்ணாமலை நகரில் செயல்பட்டு வந்த டான் காப் எண்ணெய் பிழியும் ஆலை மற்றும்  அருணாச்சலா சர்க்கரை ஆலை மூடப்பட்டுள்ளது.  புதிய தொழிற்சாலைகள் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை.  திண்டி வனம் – நகரி ரயில் பாதை,  மற்றும்  புதுச்சேரி - பெங்களூர் சாலை சீரமைக்கப்படாமல் இன்னும் நிலுவையில் உள்ளது. ஓடைகள் ஆக்கிரமிப்பு   திருவண்ணாமலை மலையி லிருந்து  பல்வேறு ஏரிகளுக்கு வரும் நீர்வரத்து மலை ஓடைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதை மீட்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.   மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள வேங்கிக்கால் ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறி செல்லும் ஓடைகள் அழிக்கப்பட்டுள்ளது. அதை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை.  நகரின் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில் நகர பேருந்துகள் இயக்கப்பட வேண்டும், வேலூர் சாலையில் இருந்து,  செங்கம் சாலை வரை சுற்றுவட்ட பாதை இன்னும் அமைக்கப்படாமல் உள்ளது. அதை உடனடியாக அமைக்க வேண்டும் என திருவண்ணாமலை வட்டாரத்தை சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாநகராட்சியாக மாற்றுவதற்கு முன் மக்களின் இத்தகைய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.