திருவள்ளூர், ஜன.30- புது கும்மிடிப்பூண்டி ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் வியாழனன்று (ஜன.30), புது கும்மிடிப்பூண்டி சின்ன மார்கெட்டில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. திருவள்ளூர் மாவட்டம், புது கும்மிடிப்பூண்டி ஊராட்சி யில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் ஊராட்சியை, பேரூராட்சியுடன் இணைத்தால் நூறு நாள் வேலை இழப்பு ஏற்படும். மேலும் வீட்டுவரி, குடிநீர் வரி, சொத்து வரி உட்பட்ட எல்லா வரிகளும் உயரும் அபாயம் உள்ளது. எனவே ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும். பேரூராட்சியுடன் இணைப்பு குறித்து உடனடியாக மக்களிடம் கருத்து கேட்புக் கூட்டத்தை நடத்த வேண்டும், 4 வார பாக்கியை வழங்க வேண்டும், நூறு நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்த வேண்டும், நாள் ஒன்றுக்கு ரூ.600 வழங்க வேண்டும். தொடர்ந்து வேலை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதற்கு விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் வட்டத் தலைவர் இ.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அ.து.கோதண்டன், வட்டச் செயலாளர் டி.கோபாலகிருஷ்ணன், பொருளாளர் பி.ஜோதி, கட்டுமான சங்கத்தின் ஒன்றிய செயலாளர் எம்.சி.சீனு, சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் நிர்வாகிகள் வி.ஜோசப், வி.குப்பன், வாலிபர் சங்கத்தின் பகுதி தலைவர் ஜெ.த.வசந்த்பௌத்தா ஆகியோர் பேசினர்.