அம்பத்தூர், டிச. 1- அம்பத்தூரில் புயலால் அறுந்து கிடந்த மின் கம்பியை கவனிக்காமல் மிதித்த போது, இளைஞர் மின்சாரம் பாய்ந்து சனிக்கிழமையன்று உயிரிழந்தார். அம்பத்தூர், மேனாம்பேடு, பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ் (27). இவர் ஆவடியில் உள்ள தனியார் வணிக நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் சனிக்கிழமை இரவு விக்னேஷ் பால் வாங்குவதற்காக வீட்டிலிருந்து கடைக்கு நடந்து சென்றார். அதே பகுதியில் புயலால் அறுந்து சாலையில் விழுந்து கிடந்த மின் கம்பியை அவர் மிதித்துள்ளார். அப்போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட விக்னேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்தூர் காவல் துறையினர் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.