திருவண்ணாமலை, ஜன.31- திருவண்ணாமலை மாவட்டம், போளூர் பகுதியில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ சிறப்புத் திட்டம் துவக்க நிகழ்ச்சி புதனன்று (ஜன.31) தொடங்கப்பட்டது. போளூர் வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் வேளாண்மை துறையின் செயல்பாடுகள், பயிர் சாகுபடி பரப்பு, பண்ணை குடும்பம், விவசாயிகள் விவரம், பணியாளர்கள் விவரம் பதிவேடு , கழிப்பறைகள் பயன்பாடு , விவசாயிகள் வருகை விவரம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார். பின்னர், குருவிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிய கட்டுமான பணிகளும், மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு தரம் ஆகியவற்றையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து போளூர் வட்டாட்சியர் அலுவலகம், அலங்காரமங்கலம் அங்கன்வாடி மையம், களம்பூர் ஆரம்ப சுகாதார நிலையம், கஸ்தம்பாடி இலங்கை தமிழர் முகாம் ஆகிய இடங்களில், மக்களுக்கு அரசின் சேவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.