கிருஷ்ணகிரி, ஏப்.27-. தேன்கனிக்கோட்டை வட்டம், பெட்ட முகிலாலம் மலைப்பகுதியில் அய்யூர் வனப்பகுதி கடல் மட்டத்திலிருந்து 1,060 மீட்டர் உயரத்தில் உள்ளது. இங்குள்ள குதிராயன் மலை உச்சியில் இருந்து கிருஷ்ணகிரி தர்மபுரி மாவட்டங்களை பார்க்க முடியும் என்று வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த வனப்பகுதியில் அடர்ந்த மரங்கள் மேற்கூரை போல் நிலப்பரப்பில் சூரிய ஒளி படாதபடி உள்ளதால் ஆண்டு முழுவதும் இங்கு குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இப்பகுதியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில் இங்கு வனத்துறை சார்பில் இயற்கை சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகிறது. பாரம்பரிய மூங்கில் குடில்கள், காட்சிக் கோபுரம், சிறுவர்கள் விளையாட்டு மைதானம், செயற்கை நீர் ஊற்றுகள், மரத்தின் மீது குடில், இயற்கை அழகைக் கண்டு ரசிக்க நடைபாதை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இங்குள்ள இயற்கை பூங்கா அருகில் சாமி ஏரியில் மான், யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர் அருந்த அடிக்கடி வந்து செல்கின்றன. இதையும் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்க காட்சி கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆண்டு முழுவதும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக குடில்கள் தங்கும் விடுதிகள் நடைபாதை கள், இருபுறமும் உள்ள மரம் செடி கொடி கள் பூச்செடிகள், பராமரித்து ஒழுங்கு படுத்தப்படாமல் உள்ளது, காட்சி கோபுரங்கள் மரத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள குடில்களுக்கான படிகள் உடைந்து விழும் நிலையில் உள்ளது. சில மரக்குடில்களின் படிகள் உடைந்து கிடக்கிறது குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் பராமரிக்கப்படாததால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கடுமை யாக குறைந்து வருகிறது. இப்பூங்காவைச் சீரமைத்து, மேம்படுத்தி, பராமரித்திட வேண்டும் என அய்யூர் வனத்துறையினருக்கும், பூங்கா நிர்வாகத்திற்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தளி கெலமங்கலம் ஒன்றியக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.