districts

சென்னை குடிநீர் ஏரிகளில் 91.8 விழுக்காடு தண்ணீர்

சென்னை,ஜன.2- சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரம் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை தேர்வாய்கண்டிகை ஏரிகள். இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மி.கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.  வடகிழக்கு பருவமழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. இதனால் குடிநீர் வழங்கும் 5 ஏரிகளிலும் நீர் மட்டம் உயர்ந்தது. இதனையடுத்து, அதிகபட்சமாக 10 ஆயிரம் கனஅடி வரை உபரிநீர் திறக்கப்பட்டது.  இதேபோல் புழல், செம்பரம்பாக்கம், ஏரிகளில் இருந்தும் குறைந்த அளவு உபரிநீர் வெளியேற்றப்பட்டது. தற்போது மழை இல்லாததால் ஏரிகளிலிருந்து உபரி நீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது, குடிநீர் வழங்கும் 5 ஏரிகளிலும் மொத்தம் 10 ஆயிரத்து 793 மி.கனஅடி தண்ணீர் இருப்புள்ளது. இது மொத்த கொள்ளளவில் 91.8 விழுக்காடாகும்.  இதற்கிடையே ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் கடந்த மாதம் முதல் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே பூண்டி ஏரி அதன் முழு கொள்ளளவான 35 அடி முழுவதும் நிரம்பியுள்ளதால் அங்கிருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு இணைப்பு கால்வாய் மூலம் 550 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. இதன் காரணமாக புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர் இருப்பு மேலும் அதிகரித்து வருகிறது.  செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தற்போது 23 அடியை நெருங்கி உள்ளது. ஏரியின் மொத்த உயரம் 24 அடி. இதில் 22.68 அடிக்கு தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. ஏரிக்கு 246 கனஅடி தண்ணீர் வருகிறது. சென்னை குடிநீர் தேவைக்காக 130 கனஅடி வெளியேற்றப்படுகிறது.