கடலூர், செப்.4- கடல் வழியாக மர்ம நபர்கள் ஊடுருவலை தடுக்கும் பொருட்டு கட லோர பாதுகாப்பு படை சார்பில் சாகர் கவாஜ் என்னும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் ரெட் போர்ஸ் எனப்படும் காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் தீவிரவாதிகள் போல் சாதாரண உடையில் கடல் வழியாக ஊடுருவ முயற்சி செய்வார்கள். இவர்களை புளு போர்ஸ் எனப்படும் கடலோர பாதுகாப்பு படை யினர், ஊர் காவல் படை யினர், கப்பல் படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் உதவியுடன் ஊருக்குள் நுழையாமல் பிடிக்க வேண்டும். அதன்படி இந்த பாது காப்பு ஒத்திகை நிகழ்ச்சி புதன்கிழமை காலை தொடங்கியது. இதில் கடலோர பாதுகாப்பு படை காவல் ஆய்வாளர் பத்மா தலைமையில் கடலூர் கட லோர பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடலூர் முதுநகர் அருகே உள்ள சித்திரைப் பேட்டை கடல் பகுதியில் ஒரு படகில் வந்த 4 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். இதையடுத்து காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்த 8 போலி வெடிகுண்டு மற்றும் ஆயுதங்களை கைப்பற்றினர்.