கள்ளக்குறிச்சி ஆக 26 - கள்ளக்குறிச்சி மாவட்டம், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் உதவித் தொகைப் பெற்று உயர் கல்வி பயின்று வரும் பெண்கள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர். தமிழகத்தில் உள்ள ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண் குழந்தைகள் பொருளாதார சிக்கல்களின் காரணமாக 10 அல்லது 12 ஆம் வகுப்பு முடித்தவுடன் கல்வியை தொடர முடியாமல் இருந்த நிலையை மாற்றி,பெண் குழந்தைகளின் கல்வி தடைப்படாமல் அவர்களின் உயர் கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் மூலம் புதுமைப்பெண் திட்டம் என்னும் உயர்கல்வி உறுதி திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் 5.9.2022 தொடங்கி வைத்து, மாநிலம் முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 6 வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் அல்லது 6 வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழியில் படித்து முதன்முதலில் மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவியருக்கும் மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இலவச கட்டாய கல்வித் திட்டத்தின் கீழ் 6 முதல் 8-ம் வகுப்பு வரை தமிழக தனியார் பள்ளியில் பயின்று 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று இருந்தாலும் இத்திட்டம் மூலம் பயனடைய முடியும். கலை,அறிவியல், மருத்துவம்,பொறியியல், தொழில்முறை படிப்புகள், துணை மருத்துவம், டிப்ளமோ, ஐ,டி,ஐ, இளநிலை உயர்கல்வி ஆகியவற்றில் மேற்படிப்பை தொடர விரும்பும் மாணவிகளுக்கு திட்டத்தின் கீழ் அப்படிப்பிற்க்கான உதவித் தொகையாக மாதம் ரூ.1000 வழங்கப்படும். மேலும் கல்லூரியில் சென்று பயிலும் மாணவியருக்கு மட்டுமே இந்த உதவி தொகை வழங்கப்படும். ஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் இருந்தாலும் இந்த திட்டத்தின் கீழ் உதவி தொகை பெறலாம். இத்திட்டத்தின் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை சுமார் 3,078 உயர்கல்வி பயிலும் மாணவிகள் ஒவ்வொரு மாதமும் ரூ.1000 ஊக்கத்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தின் கீழ் பயனடைந்த கள்ளக்குறிச்சி மாவட்டம், புதுஉச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்த மாணவி ராதிகா தெரிவிக்கையில்.நான் இப்போது கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கணிதவியல் பயின்று வருகிறேன்.எனது தந்தை இறந்துவிட்டார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து தந்தை இல்லாத நிலையில் இருந்த எனக்கு புதுமைப் பெண் திட்டம் கை குடுத்தது.மற்றும் சிறுவம்பார் கிராமத்தைச் சேர்ந்த மாணவி மகதி தெரிவிக்கையில்.நான் ஸ்ரீ சாரதா மகா வித்தியாலயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு ஆங்கிலவியல் பயின்று வருகிறேன். நான் பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரியில் சேரும்போது புதுமைப்பெண் திட்டம் குறித்து அறிந்தேன். கல்லூரியில் சேர்ந்தவுடன் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தேன். கல்லூரியில் சேர்ந்த முதல் ஆண்டிலிருந்து மாதம் ரூ.1000 எனக்கு பெரும் உதவியாக உள்ளது.அதனால் முதலமைச்சருக்கு நன்றியியை தெரிவித்து கொள்கிறோம் என்றார்.