சென்னை, அக். 16- வீடு இடிந்து விழுந்தபோது கட்டிட இடிபாடுகளில் சிக்கிய கர்ப்பிணி உட்பட 3 பேரை காவல் துறையினர் பத்திரமாக மீட்டனர். சென்னையில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ராஜமங்கலம் பகுதி ராஜாஜி நகர் 2ஆவது தெருவில் உள்ள ஒரு வீடு சேதமடைந்து இருந்ததால் வீட்டில் இருந்தவர்கள் முன்னெச்சரிக்கையாக சில நாட்களுக்கு முன் அந்த வீட்டில் இருந்து சென்றுவிட்டனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த மழையின் காரணமாக அந்த வீடு திடீரென இடிந்து விழுந்ததில் பக்கத்து வீட்டின் படிக்கட்டுகள் உடைந்து சேதமடைந்தது. இதனால் அந்த வீட்டில் முதல் தளத்தில் வசித்து வந்த 5 மாத கர்ப்பிணி மீனலோட்சினி (29), அவரது தாய் சாந்தி (51) மற்றும் ஒருவர் என 3 பேர் இடிபாடுகளில் சிக்கித் தவித்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராஜமங்கலம் காவல் துறையினர் கர்ப்பிணி உட்பட மூவரையும் பத்திரமாக மீட்டு வெளியே அழைத்து வந்தனர். பின்னர் அவர்களது உறவினர் வீட்டுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.