சென்னை,மே 15-
சென்னை மாநகராட்சியில் சொத்து வரியை கணக்கீடு செய்ய புவிசார் தகவல் வரைபடம் தயாரிக்கப்பட்டது. இதற்காக டிரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வீடுகள், வணிக வளாகங்கள், அரசு கட்டிடங்களின் பரப்பளவு கணக்கீடு செய்யப்பட்டது. இதில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில் உள்ள 3.10 லட்சம் கட்டிடங்களில் சொத்து வரி செலுத்துவதில் மாறுபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சிக்கு அறிக்கை சமர்பிக்கப்பட்டது. அதில் 30 ஆயிரத்து 899 கட்டிடங்களை மாநகராட்சி வரி வசூலிப்பாளர்கள் அளவீடு செய்து உறுதி செய்தனர். அவர்களுக்கு தற்போது சரியான சொத்துவரி வசூலிக்கப்பட்டு வருகிறது. மீதம் உள்ள 2 லட்சத்து 79 ஆயிரத்து 240 கட்டிடங்களில் சொத்துவரி நிர்ணயம் செய்வதில் குளறுபடி உள்ளது. இதையடுத்து இந்த கட்டிடங்களை மறுஅளவீடு செய்யும் பணி முழு வீச்சில் தொடங்கி நடந்து வருகிறது.
இந்த மறுஆய்வு பணிகளை 9 மாதங்களுக்குள் முடிக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது. மேலும் சொத்துவரி மாறுபாடு உள்ள கட்டிடங்களின் எண்ணிக்கை மண்டலம் வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்காக ஒப்பந்தம் கோரப்பட்டது. ஒப்பந்ததாரர்களுக்கு பணி ஆணையத்தை மேயர் பிரியா வழங்கினார். மேலும் இந்த பணியில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு மாறுபாடு உள்ள கட்டிடங்கள் குறித்த விவரங்களை மண்டல வாரியாக சென்னை மாநகராட்சி பிரித்து வழங்கியுள்ளது.