கடலூர், நவ.29- கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதில் பல இடங்களில் நீண்ட நாட்களாக மழை நீர் தேங்கி இருப்பதால், அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் பரவி வருகிறது. இதனால் மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு தினசரி 1500-க்கும் மேற்பட்டவர்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதற்கிடையே புதன்கிழமை (நவ.29) மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் சளி, காய்ச்சல் மற்றும், இதர பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெற்று சென்றனர். இதனால் புறநோயாளிகளுக்கு சீட்டு கொடுக்கும் இடத்தில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப் பட்ட குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்த 3 வயது சிறுவன் மற்றும் திருப்பாதிரிப்புலியூர், பண்ருட்டி, தொரப்பாடி, விருத்தாசலம், நெல்லிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 12 பேர் டெங்கு காய்ச்சலுக்கான தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதவிர தொடர் தீவிர காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 71 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.