districts

img

165 மலை கிராம மக்களை வெளியேற்றும் முயற்சி: விவசாயிகள் ஆவேச போராட்டம் !

கிருஷ்ணகிரி,செப். 3- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அஞ்செட்டி, தேன்கனிக் கோட்டை வட்டங்களை மையப்படுத்தி வனவிலங்குகள் சரணாலயம் அமைப்பதாக கூறி 165 மலை கிராமங்களை அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.  மலை மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதற்காக அமேசான் காடுகளில் இருந்து கொடிய வனவிலங்குகள், 1500 க்கும் மேற்பட்ட விஷப் பாம்புகளை கொண்டு வந்து அஞ்செட்டி வனப்பகுதியில் விட்டுள்ளனர்.  மேலும், 2006 வன உரிமைச் சட்டத்துக்கு எதிராக கடந்த 2 ஆண்டுகளாக சித்தாண்டபுரம், தேவன் தொட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் வீடுகளை விட்டு வெளியேறும்படி கடிதம் வழங்கியுள்ளனர். இதனால், புதிதாக வீடுகள் கட்ட அனுமதிக்கவில்லை. ஏற்கெனவே கட்டப்பட்ட வீடுகளுக்கும் பட்டா வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளனர். ஆடு,மாடுகளை மேய்க்க விடுவதில்லை. புதிதாக ஆழ்துளை கிணறு, சிறு மகசூல் எடுக்க விடாமல் தொடர்ந்து இடையூறு செய்து வருகின்றனர். வனச்சரக அலுவலர்கள் இந்த நடவடிக்கைகளை கண்டித்தும், 2006 வன உரிமைச் சட்டப்படி, இப்பகுதியில் வாழும் மக்களுக்கு வீடுகளுக்கு பட்டா உட்பட அனைத்து உரிமைகளையும் வழங்க வலியுறுத்தி ஜவளகிரி வனச்சரக அலுவலகம் அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் செப்.3 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் சிவப்பா தலைமை வகித்தார். பொருளாளர் அனுப்ப முன்னிலை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் பி.பெருமாள், மாவட்டச் செயலாளர் பிரகாஷ், தலைவர் முருகேஷ், பொருளாளர் எம்எம்.ராஜூ ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். முன்னாள் வட்டச் செயலாளர் டி. வெங்கடேஷ் அலுவலக செயலாளர் நடராஜன்,மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் குமாரவடிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில், ஜவளகிரி வனச் சரக அலுவலரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.