districts

img

மழை தண்ணீர் வெளியேற வழியின்றி சேதமடைந்த 1000 மூட்டை நெல் மணிகள்!

கடலூர், ஆக.5- கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த சேமகோட்டை பகுதியில் அரசின் வேளாண் துறை நேரடி கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.  சேமக்கோட்டை, ஏரிப்பாளையம், ராயர்பாளையம், மணப்பாக்கம், சிறுவத்தூர், அங்கு செட்டிபாளையம், எலந்தப்பட்டு, திருவாமூர், சிறு கிராமம், குடுமியான் குப்பம், மணம் தவிழ்ந்த புத்தூர் உள்ளிட்ட கிராம பகுதிகளில் விளையும் நெல் மணிகளை சேமக்கோட்டை அரசு நேரடி கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வருகின்றனர். சேமக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.5) இரவு திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் தாழ்வான பகுதிகளில் தேங்கியது.  சேமக்கோட்டை பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்குள் மழை நீர் தேங்கியது. வெளியேற வழியின்றி அங்கு வைக்கப்பட்டிருந்த 1000-த்திற்கும் மேற்பட்ட நெல் மணி மூட்டைகளை வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.    இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறும் போது, “ அரசு நேரடி கொள்முதல் நிலையத்தின் களம் தாழ்வான பகுதியில் அமைத்துள்ளனர். இதனால் சிறிய அளவில் தூறல் போட்டால் தண்ணீர் தேங்கி விடுகிறது. இந்த நிலையில், கடந்த 15 நாட்களாக கொள்முதல் செய்யவில்லை. இதனால் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்தது. நெல் மூட்டைகளை அடுக்கி வைக்கவும், உலர வைக்கவும் சிமெண்ட் தரை அமைக்க வேண்டும். பிளாஸ்டிக் தார்ப் பாய் தேவைக்கு ஏற்ப கொடுக்க வேண்டும் என்றார்.