districts

img

சிதம்பரம் நேருநகரில் குடியிருப்புகளை காலி செய்யும் நடவடிக்கையை நிறுத்துக சார்ஆட்சியரிடம் குடியிருப்போர் மனு

சிதம்பரம், ஜூன் 14- சிதம்பரத்தில் அரசு மருத்துவமனை விரிவாக்கம் என்று பெயரில் 50 ஆண்டு களுக்கு மேல் குடியிருக்கும் நேரு நகர்  மக்களை காலி செய்ய எடுக்கும் நடவடிக்கை யால் அப்பகுதி மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும் வியாழக்கிழமை  (ஜூன் 13)  தங்களின் குடியிருப்புகளை பாதுகாக்க வேண்டும் என்று  சிதம்பரம் நகர் மன்ற துணைத்தலைவர் முத்துக்குமரன் தலைமையில் சிதம்பரம் சார்-ஆட்சியர் ராஷ்மி ராணியிடம்  மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியதாவது, சிதம்பரம் நகராட்சி 33 வது வார்டில் உள்ள நேரு நகரில்  கடந்த 50 ஆண்டுகளாக 55 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நேரு நகரில் தான்  எங்களுக்கு ஆதார் அட்டை, ரேசன் கார்டு,  மின் கட்டண அட்டை, வரி ரசீது ஆகியவைகள்  இருக்கிறது.

நாங்கள் இருக்கும் இடம் மடங்களுக்கு சொந்தமானதாகும்.  இங்குள்ள மருத்துவமனை கூட மடங்களுக்கு சொந்தமான இடங்களில் தான் அமைந்துள்ளது. இந்த நிலையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அன்றைய மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி சிதம்பரம் அரசு மருத்துவமனையை ஆய்வு  செய்தனர். மருத்துவமனை விரிவாக்கம் செய்ய வேண்டி உள்ளதால் மருத்துவமனை இடத்தை முழுமையாக உறுதி செய்ய தலைமை மருத்துவ அலுவலருக்கு உத்தரவு  பிறப்பித்தார்.

அதனடிப்படையில் மருத்துவ மனை வளாகத்திற்குள் கட்டிடங்கள் கட்டும் பணியும், விரிவாக்கம் செய்யும் பணியும்  நடைபெற்று வருகிறது.  இதனிடையே  சென்னை உயர்நீதி மன்றத்தில் இது குறித்து பொது நல வழக்கு  தொடர்ந்த ஒரு நபர் ஏழைகள் பயன்படுத்தும்  அரசு மருத்துவமனையில் உள்ள ஆக்கிரமிப்பு இடத்தில் விரிவாக்கம் தடை பெறுகிறது என பொய்யான தகவலை கொடுத்துள்ளார்.  எங்கள் வீடுகள்  மருத்துவ மனை இடத்தில்  இருப்பதுபோல கூறி இடிக்க ஏற்பாடு செய்து வருகிறார்.

மருத்துவ மனைக்கு எந்த விதத்திலும் தொந்தரவு இல்லாமல், அதன் சுற்று சுவருக்கு வெளியே  பல்லாண்டுகாலம் வாழும் எங்கள் வீடுகளை பாதுகாத்து வேண்டும். இவர்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு. நகர செயலாளர் ராஜா உள்ளிட்ட கட்சியினர் உடன் இருந்தனர்.