districts

img

சமூக வலைத்தளங்களில் நல்ல விஷயங்களை எடுத்துச் செல்ல வேண்டும் - சமூக வலைதள கருத்துருவாக்கம் செய்யும் நபர்களுக்கு அதிகாரிகள் அறிவுரை

கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இன்று சமுக வலைத்தள கருத்துருவாக்கம்( SOCIAL MEDIA INFLUECER ) செய்யும் நபர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.சமூக வலைத்தளங்களான இன்ஸ்டாகிராம்,பேஸ்புக்,  யூடியூப்  பக்கங்களில் அதிக பின் தொடர்பவர்களைக் கொண்ட பக்கங்களின்  அட்மின்கள் சுமார் 70 பேர் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர். 
 
இந்த கலந்துரையாடலில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு விதமான வதந்திகளும் உறுதிப்படுத்தப்படாத செய்திகளும் சமூக வலைத்தளங்களில் பரவுவதைத்  தடுக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டன. முதலில் பேசிய கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மேலும் சமூக வலைத்தளங்களில் நல்ல விஷயங்களை எடுத்துச் செல்ல வேண்டும்,  சர்ச்சைக்குரிய விஷயங்கள் இருந்தால் அதை ஒருமுறை  சரி பார்த்துக்கொண்டு சொல்வது அவசியம் எனவும் , சரி பார்த்துக்கொள்ள அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.
 
இதனை தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், வழக்கமான காட்சி, பத்திரிகை ஊடகங்களுக்குச்  செய்திகளைக் குறித்து உறுதிப்படுத்திக் கொள்வதற்குப் பல வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் சமூக வலைத்தள கருத்துருவகாக்கம் செய்பவர்களுக்கு அதற்கான வாய்ப்பு குறைவு. ஒரு செய்தியை பகிர்வும் பொழுது அதன் உண்மைத் தன்மையையும் அதன் பின்னணியையும் முழுமையாகத் தெரிந்து கொள்வது அவசியம் எனவும், தவறான தகவல்களைப் பகிர்ந்தால்  அதற்கு அவர்களும் பொறுப்பு என்பதை உணர வேண்டும் எனவும்  மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் தெரிவித்தார். செய்தி தொடர்பு துறையின் மூலமோ அல்லது  அதிகாரிகளிடமோ தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது எனவும் தெரிவித்தார்.
 
இதனை தொடர்ந்து பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், இளைஞர்கள் அதிகமானோர் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தக்கூடிய சூழலில்,  போதைப் பொருள் பயன்பாட்டைத் தடுப்பது, சாலை விபத்துகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற முக்கிய அம்சங்கள் குறித்தும் எடுத்துரைத்தார். எந்த ஒரு தகவலையும் உறுதிப்படுத்திக் கொள்ள சமூக வலைத்தளங்களில் போடும் போதும் மாவட்ட நிர்வாகத்தின் சமூக வலைத்தள கணக்குகளை tag செய்யுமாறு அதிகாரிகள் அறிவுரை வழங்கினர். கடந்த தேர்தலில் கோவை மாவட்டத்தில் வாக்கு சதவீதம் குறைவாக இருந்த நிலையில், நடைபெற உள்ள தேர்தலில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க , விழிப்புணர்வை ஏற்படுத்தும் விஷயங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் எனவும் சமூக வலைத்தள கருத்துருவாக்கம் செய்யும் நபர்களுடனான கலந்துரையாடலின் போது அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

;