districts

img

வால்பாறை: கோழிக்கூண்டில் சிக்கிய சிறுத்தை பலி

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வரட்டுப்பாறை எஸ்டேட்  பழைய வால்பாறை பகுதியில் இரவு நேரத்தில் கோழிகளை பிடிக்க வந்த ஆண் சிறுத்தை ஒன்று கூண்டில் சிக்கி இறந்ததாக கூறப்படுகிறது.

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வரட்டுப்பாறை எஸ்டேட் அருகே உள்ள பழைய வால்பாறை  பகுதியில் உள்ள உஸ்மான் என்பவருக்கு சொந்தமான தேநீர் கடையின் பின்புறம் கோழிக்கூண்டு  அமைக்கப்பட்டுள்ளது. இக்கோழி கூண்டிலுள்ள கோழிகளை பிடிக்க வந்த ஆண் சிறுத்தை   இறந்துகிடப்பதாக வியாழனன்று காலை 7 மணியளவில்  வால்பாறை வனச்சரகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

இத்தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற தனியார் காடுகள் பராமரிப்பு பிரிவு வனவர் மற்றும் மனித - வன உயிரின மோதல் தடுப்பு பிரிவு வனவர் மூலமாக தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்பின்னர் இறந்து கிடந்த ஆண் சிறுத்தையினை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி ,வால்பாறை வனச்சரக அலுவலரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனைத்தொடர்ந்து வன கால்நடை மருத்துவ குழுவினரால்  இறந்த சிறுத்தையின் உடலை மீட்டு வனக்கால்நடை மருத்துவரால் உடற்கூறாய்விற்கு உட்படுத்தப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வால்பாறை வனச்சரக அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுத்தை கோழிக்கூண்டில் சிக்கி இறந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும்  மர்மமான முறையில் சிறுத்தை இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.