கட்டுக்கடங்காத கலவரம் மணிப்பூரில் நடைபெற்று வருகிறது. மோடி நாடாளுமன்றத்திற்கு வரமாட்டார், உறுப்பினர்களின் கேள்விகளுக்கும் பதில் அளிக்க மாட்டார், நாடக ஆட்சி நடத்தும் மோடிக்கு பிரதமர் பதவி ஒரு கேடா? என கோவையில் சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.
கோவை காந்திபுரத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மணிப்பூர் கலவரம் 3 மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து நீடிக்கிறது. இன்னும் அக்கலவரம் கட்டுப்படுத்தப்படவில்லை. இது மெய்தி, குக்கி என்ற இரு இனத்தினவருக்கான மோதல் என்பது போன்ற தோற்றத்தை பாஜக ஏற்படுத்த முயல்கிறது. உண்மையில், இந்த கலவரத்தை தூண்டிவிடுவதே மணிப்பூர் மாநில பாஜக அரசும், அதன் முதல்வர் பைரேன் சிங் தான். மணிப்பூர் மலைகளில் இருந்து மக்களை அகற்றிவிட்டு, அந்த மலைகளை அம்பானி, அதானி போன்ற கார்ப்ரேட்டுகளுக்கு தாரைவார்க்கவே இத்தகைய கலவரங்கள் திட்டமிட்டு பாஜகாவால் நடத்தப்படுகிறது. ஒன்றிய மோடி அரசு மணிப்பூர் முதல்வரை பதவி நீக்கம் செய்ய தயாராக இல்லை. இதுவரை கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மணிப்பூர் அரசும், ஒன்றிய அரசும் எந்த உதவியும் செய்யவில்லை. இந்நிலையில்தான் மனிதாபிமான உணர்வோடு, மணிப்பூர் மக்களுக்கு 10 கோடி ரூபாய் மதிப்புடைய அத்தியாவசிய பொருட்களை கொடுக்க தமிழக அரசு முன்வந்துள்ளது. தமிழக முதல்வரின் இத்தகைய நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்கிறது. நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். தமிழக அரசின் இந்த உதவிகளை மணிப்பூர் அரசு பெற்றுக்கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும். ஒன்றிய அரசும் உதவிகளை வழங்க வேண்டும்.
கோவை, திருப்பூர் உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் தற்போது கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகிறது. குறிப்பாக ஐவுளி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதியை பெரும் பகுதி நம்பியே ஜவுளித்தொழில் இயங்குகிறது. இந்நிலையில், பொருளாதார நெருக்கடி காரணமாக, வாங்கும் சக்தியை இழந்து நமது ஆயத்த ஆடைகளை பிற நாடுகள் வாங்க தயாராக இல்லை. மேலும், பங்களாதேஷ் போன்ற நாடுகளின் ஆடைகள் இறக்குமதி செய்யப்பட்டு இங்கே விற்பனை செய்யப்படுவதால், ஜவுளித்தொழில்களே முடங்கிப்போகும் நிலை இருக்கிறது. இத்தொழிலை நம்பி தமிழகத்தில் மட்டும் 15 லட்சம் பேர் உள்ளனர். ஆனால், இதுகுறித்தெல்லாம் ஒன்றிய மோடி அரசிற்கு கவலையும் இல்லை, கண்டு கொள்வதும் இல்லை. பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வரமாட்டார், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல மாட்டார் என்றால், அவர் என்ன பிரதமர்? நாடகம் நடிப்பதை போன்ற ஆட்சி நடக்கிறது.
வேலையின்மை பிரச்சனை தீவிரமடைந்து இருக்கிறது. இளைஞர்கள் பரிதவித்துக்கொண்டிருக்கிறார்கள். விலைவாசி கடுமையாக உயர்ந்து உள்ளது. கட்டுப்படுத்த முடியவில்லை, மணிப்பூரை தொடர்ந்து ஹரியானாவில் கலவரம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. ராஜஸ்தானில் ஆரம்பிக்கிறார்கள். ரயிலில் மனநிலை பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் காவலரால் எப்படி முஸ்லீங்களை தேடிப்பார்த்து சுட முடிந்தது? இது போன்ற செயல்களை கட்டுப்படுத்த முடியாமல் உள்துறை அமைச்சராக அமித்ஷா எதற்கு பதவி நீடிக்க வேண்டும்? இவர்களுக்கு பதவி ஒரு கேடா.
இந்தியா கூட்டணியின் பலம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இதை தடுக்கவே பல இடங்களில் கலவரங்களை ஏற்படுத்தி பெரும்பான்மை மக்களை திசை திருப்ப முயல்கின்றனர். மதம் என்ற தோற்றத்தை வைத்து அதன் அடிப்படையில் மக்களை திரட்ட பார்க்கின்றனர், இனி அது எடுபடாது. இந்தியா கூட்டணி வலுவடைந்து வருவதை கண்ட அதிர்ச்சியில்தான், அவர்கள் உடைந்த கட்சி, உடைக்கப்பட்ட கட்சிகளை அழைத்து கூட்டம் நடத்தியிருக்கிறார்கள். பாஜக கூட்டணியில் உள்ள 38 கட்சிகளின் பெயர்களை அந்த கூட்டணி தலைவர்களால் சொல்ல முடியுமா?
உள்நாட்டு பிரச்சனைகளை பற்றி கவலைப்படாமல், அண்ணாமலையின் பாதயாத்திரையை துவக்கி வைக்க அமித்ஷா தமிழகம் வந்தார். திமுக அரசை விமர்சிக்கும் தார்மீக உரிமை அமித்ஷாவிற்க்கு எங்கே இருக்கின்றது?. மற்ற அரசியல் கட்சிகளின் இயக்கத்தை விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் நகைப்பிற்குரியதாக இருக்கிறது. சிறிது தூரம் நடந்து, பின்னர் சொகுசு வாகனத்தில் செல்வது, பின்னர் நடப்பது என அண்ணாமலை நடைபயணம் இருக்கின்றது. இது நடைபயணமா? இந்த மாதிரி நடைபயணம் போனால் தமிழகம் மட்டுமல்ல நாடு முழுவதும் மேற்கொள்ளலாமே? அண்ணாமலை வானத்திற்கும், பூமிக்கும் குதித்தாலும் தமிழகத்தில் இவர்களின் நாடகம் எடுபடாது என்றார்.
முன்னதாக, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த கே.பாலகிருஷ்ணன், தில்லி அரசு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி ஒன்றிய அரசே செயல்படுகின்றது. மாநில உரிமைகளை பறித்து ஓரே அரசு என்று செயல்பட பார்க்கின்றது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கான உரிமைகளை கொடுக்க வேண்டாமா? உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று கொள்கின்றோம் என சொல்லாமல் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்து, உச்சநீதிமன்றத்திற்கு, எதிரான போக்கை ஒன்றிய அரசு மேற்கொள்கிறது. ஒன்றிய அரசின் இதுபோன்ற செயல் மாநில உரிமைகளை பறிக்கும், நாட்டை சீர்குலைக்கும்.
மேலும், ஓபிஎஸ், டி.டி.வி.தினகரன் கொடநாடு வழக்கில் நீதி கேட்டு நடைபெற்ற ஆர்ப்பாட்டம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசுகையில், திமுக தேர்தல் அறிக்கையில் கொடநாடு வழக்கில் சம்மந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து இருந்தார்கள். இந்த வழக்கை துரிதப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை மார்க்சிஸ்ட் கட்சியும் முன்வைத்து வருகிறது. கொடநாடு வழக்கில் நிறைய மர்ம முடிச்சுகள் இருக்கிறது. அதை வெளிப்படுத்தி உண்மையை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது என்றார்.
இஸ்லாமியர்களையும், கிறிஸ்துவர்களையும் சாத்தானின் பிள்ளைகள் என்று சீமான் கூறியிருக்காரே என்ற கேள்விக்கு,
சீமான் மாதிரியான ஆட்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. என்றாலும் குறிப்பிட்ட மதம், சாதி சார்ந்த மக்களை தரம் தாழ்த்தி பேசுவது சரியானது அல்ல. அவரது பேச்சை ஏற்றுக் கொள்ள முடியாது. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களை கேவலப்படுத்தும் வகையிலான அவரது பேச்சு கண்டனத்திற்குரியது.
திமுக அரசிற்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சி போராடுவது இல்லையே என அதிமுக எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டியுள்ளாரே என்கிற கேள்விக்கு, மக்கள் பாதிப்புக்கு உள்ளாகும் போது சிபிஎம் தொடர்ந்து போராடுகின்றது. சொத்துவரி உயர்வுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சியின் போராட்டம்தான் அரசை பணிய வைத்தது. இதேபோன்று நெய்வேலியில் போராட்டம் நடத்தி வருகிறோம். கோவை மாநகரத்தின் குடிநீர் விநியோகத்தை சூயஸ் நிறுவனத்திடம் அளித்த விவகாரத்தில் இன்று வரை சிபிஎம் போராடுகிறது. ஆகவேதான் பொதுக்குழாய்களை அகற்ற மாட்டோம் என்கிற வாக்குறுதியை மாமன்றத்திலேயே மாநகராட்சி ஆணையர் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இவ்வளவு பேசுகிற வேலுமணி, மக்கள் விரோத திட்டங்களையே செயல்படுத்தி வருகிற ஒன்றிய அரசை கண்டித்து ஏன் எஸ்.பி. வேலுமணி வாயை திறப்பதில்லை? அதிமுக ஏன் போராடுவதில்லை? என்று பதில் சொல்வாரா. பாஜக என்ற பேராபத்தில் இருந்து நாட்டை பாதுகாக்க திமுக உடன் துணை நிற்கிறோம் என்றார்.
முன்னதாக இந்த செய்தியாளர் சந்திப்பின்போது, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன், செயற்குழு உறுப்பினர் யு.கே.சிவஞானம் ஆகியோர் உடனிருந்தனர்.