districts

மூத்த குடிமக்களை தண்ணீருக்கு தவிக்க விடும் திருமுருகன் பூண்டி நகராட்சி

திருப்பூர், மே 21 - திருமுருகன்பூண்டி நகராட்சி நிர்வாகம் மூத்த குடிமக்களின் குடிநீர் தாகம் தணிக்க தடுமாறுவது வேதனையளிப்பதாக தி கன்ஸ்யூமர்ஸ் கேர் அசோசியேசன் தலைவர் எஸ்.காதர் பாட்சா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருமுருகன் பூண்டி மக்கள் பலரின் குமுறலை நகராட்சி நிர்வாகம் அலட்சியப்படுத்துகிறது. தனித்து வாழும் மூத்த குடிமக்கள் குடிநீருக்கு அல்லாடுவது சொல்ல இயலவில்லை. 20 நாட்கள் ஆகியும் குடிநீர் விநியோகம் கிடைக்க வகையில்லை. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கோவை சரக செயற்பொறியாளரின் அலைபேசிக்கு அழைத்தாலும் எடுப்பதில்லை. வாட்ஸ் அப் தகவல்களை காணத் திறப்பதில்லை. மாவட்ட ஆட்சியர் மற்றும் சென்னை குடிநீர் வடிகால் வாரிய தலைவர் கவன ஈர்ப்புக்கு மின்னஞ்சல் மூலம் செய்தி அனுப்பினாலும் கண்டுகொள்ளவில்லை. மாதக் குடிநீர் கட்டணமாக ரூபாய் 150 வசூல் செய்ய முன்வரும் பூண்டி நகராட்சி 10 நாட்களுக்கு ஒரு முறையாவது குடிநீர் விநியோகம் செய்ய வேண்டியது நியதி. இந்திய அரசியல் சாசனம் பிரிவு 21ன் கீழ் அடிப்படை தேவைகளுக்கான உரிமை பறிபோகும் நிலை உருவாக்கப்படுகிறது. 2019 நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழும் ஏமாற்றம் தருகிறது. 8 கி.மீட்டருக்கு நவீன ரக குழாய்கள் பதிப்பது நடைபெறாமல் குழாய்கள் நாய்கள் மற்றும் விஷ ஜந்துக்களின் கூடாரமாகி விட்டது.  நாளேடுகளும் ஆதங்கங்களை அவ்வப்போது வெளிப்படுத்துவதை அதிகாரிகள் பொருட்படுத்துவது இல்லை. பொது மக்களின் தண்ணீர் தாகத்தை தணிக்க நிர்வாகங்கள் முன் வர வேண்டும் என்று காதர் பாட்சா வலியுறுத்தியுள்ளார்.