மதுரை, மே 21 -திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு ள்ள அறையையொட்டி தனியார் நிறுவன இண்டர்நெட் இணைப்புடன் கூடியகணினியும், சில தொழில்நுட்ப கருவி களும் திடீரென வைக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுதொடர்பாக திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் பா.சரவணன், மாவட்டதேர்தல் அதிகாரியிடம் முறையிட்டுள் ளார்.வாக்கு எண்ணிக்கை மே 23 அன்றுநடைபெற உள்ள நிலையில், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மதுரை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு இயந்திரங்கள் வைக்கப் பட்டுள்ள அறைக்கு 100 மீட்டருக்கு உட்பட்ட இடத்திலேயே ஏர்டெல் நிறுவன இண்டர்நெட் இணைப்புடன் கூடிய கணிப்பொறி மற்றும் சில மின்னணு தொழில்நுட்ப சாதனங்கள் திடீரென வைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலரி டம் ஆட்சேபணை தெரிவித்தும் அவர் அதை அலட்சியப்படுத்தினார்.வாக்குப்பெட்டிகள் வைக்கப் பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் எனப்படும் பிரதான அறைக்கு அருகிலோ, அதன் அடுத்த அறையிலோ 100 மீட்டர் சுற்றளவிற்குள் எந்தவிதமான பொருட்களும் வைக்கப்படக்கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் விதிகளை மீறி கணினி உள்ளிட்ட சாதனங்கள் வைக்கப்பட்டிருப்பது, அந்த இணைய இணைப்பை பயன்படுத்தி வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகளை செய்வதற்கான முயற்சி யாகவே கருதுகிறேன் என வேட்பாளர் சரவணன் தமது புகார்க் கடிதத்தில் கூறியுள்ளார். உடனடியாக அந்தப் பொருட்களை அகற்றி, வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.