ஒட்டப்பிடாரம் தொகுதியில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்யும் இடங்கள் அறிவிப்பு
தூத்துக்குடி, ஏப்.28-தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் எம்.சி. சண்முகையாவை ஆதரித்து மே 1, 2 ம் தேதிகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்பிரச்சாரம் செய்கிறார்.இதுகுறித்து திமுக தேர்தல் பொறுப்பாளர் கே.என்.நேரு,தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், ஒட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதிஇடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எம்.சி.சண்முகையாவை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பு பிரச்சாரம் செய்ய உள்ளார். மே 1-ம் தேதி மாலை5 மணிக்கு தூத்துக்குடி ஒன்றியத்துக்குட்பட்ட ஹவுசிங் போர்டுகுடியிருப்போர் நலச் சங்கம் சந்திப்பில் பிரச்சாரத்தை தொடங்குகிறார். தொடர்ந்து அவர் அன்னை இந்திரா நகர் பகுதியிலும்,6 மணிக்கு மாப்பிள்ளையூரணியிலும், 7 மணிக்கு தருவைக் குளத்திலும், இரவு 7.30 மணிக்கு புதியம்புத்தூரிலும், 8 மணிக்கு ஒட்டப்பிடாரத்திலும் பேசுகிறார். மே 2-ம் தேதிகாலை 8.30 மணிக்கு ஸ்பிக் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சந்திப்பில் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். பின்னர், மாலை5 மணிக்கு கோரம்பள்ளத்தில் தொடங்கி, புதுக்கோட்டை, கூட்டாம்புளி, தங்கம்மாள்புரம், கட்டாலங்குளம் வழியாகச் சென்று இரவு 7.30 மணிக்கு முடிவைத்தானேந்தல் கிராமத்தில்பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்’
சங்கரன்கோவில் ஆணையர் அறிவுறுத்தல்
திருநெல்வேலி, ஏப்.28-சங்கரன்கோவிலில் இரு குடிநீர் திட்டங்கள் மூலமாக மட்டுமே குடிநீர் பெறப்படுவதால், பொதுமக்கள் குடிநீரைசிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என நகராட்சி ஆணையர் (பொ) முகைதீன்அப்துல்காதர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், சங்கரன்கோவிலுக்கு நாளொன்றுக்கு தேவைப்படும் குடிநீர் அளவு55 லட்சம் லிட்டர். ஆனால் தற்போது பெறப்படும் குடிநீர் அளவு35 லட்சம் லிட்டர். கோடைக் காலத்தில் கோட்டமலையாறு திட்டத்தின் மூலம் தண்ணீர் கிடைக்காது. இதர இரண்டு குடிநீர்த் திட்டங்கள் மூலமாக தினசரி 35 லட்சம் லிட்டர் குடிநீர் பெறப்பட்டு வருகிறது. தலைமை நீரேற்று நிலையத்தில் மின்பராமரிப்பு காரணமாகவும், மழையின் காரணமாகவும் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு மானூர் மற்றும் தாமிரபரணி கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மூலம் கிடைக்கப் பெறவேண்டிய குடிநீர் அளவுகுறைந்து விடுகிறது. கோடைக்காலத்தில் குறைவின்றி குடிநீர்வழங்குவதற்காக நகராட்சி நிர்வாகம் மற்றும் தனியார் டேங்கர்லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. நகரில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளதால் இதர உபயோகத்துக்கு போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் குடிநீர் அல்லாத பிற உபயோகத்திற்கும் குடிநீரையேபொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, கோடைக்காலத்தில் வழங்கப்படும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி,நகராட்சி நிர்வாகத்துக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.மேலும், சங்கரன்கோவில் நகராட்சியில் தினசரி குடிநீர்வழங்க புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டம் ரூ.543 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் அனைத்தும் 2020-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்குள் முடிக்கப்பட்டு, அதன் பின்னர்நாள்தோறும் குடிநீர் விநியோகம் இருக்கும் என தெரிவித்துள்ளார்.
பறக்கும் படை சோதனையில் ரூ.1.95 லட்சம் பணம் பறிமுதல்
தூத்துக்குடி, ஏப்.28 -தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிஇடைத்தேர்தலையொட்டி, ஒட்டப்பிடாரம் வட்டத்துக்கு உட்பட்ட தருவைகுளம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் வேளாண் அலுவலர் பாப்பாத்தி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் சனிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாகச் சென்ற காரை நிறுத்திசோதனையிட்டதில், ரூ.1.95 லட்சம் பணத்தை அதிகாரிகள்பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, காரில் இருந்த இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். உரிய ஆவணங்களை அவர் ஒப்படைக்காததால் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை ஒட்டப்பிடாரம் வட்டாட்சியர் மலர் தேவனிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.