districts

img

எஸ்சி; எஸ்.டி வழக்குகளில் முன்ஜாமீன் குறித்த உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக மேல்முறையீடு செய்திடுக!

தமிழக அரசுக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வேண்டுகோள்!

சென்னை, நவ.27- தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லகண்ணு, பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் விடுத்த அறிக்கை வருமாறு: எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்பு சட்ட வழக்குகளில் முன்ஜாமீன் பெறுவதற்காக உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் செவ்வாயன்று தினம் தீர்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. புதுக்கோட்டையைச் சேர்ந்த ஜெயந்தி என்பவர் எஸ்சி/எஸ்டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் வழக்கில் முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில்  மனு தாக்கல் செய்திருந்தார். வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் இதுவரை மனுத்தாக்கல் செய்ய முடியாது.அவ்வாறு மனு தாக்கல் செய்தாலும் வழக்கு எண் வழங்கப்படாது.அது விசாரணைப் பட்டியலுக்கும் வராது. இந்நிலையில் ஜெயந்தி என்பவர் தாக்கல் செய்திருந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.நீதிமன்றம் மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் அவர்களை உதவிக்காக நியமித்துக்கொண்டு தீர்ப்பை வழங்கியுள்ளது.

அதன்படி, எஸ்சி, எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்பு சட்ட வழக்குகளில் முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிலுவையில் இருந்தால் அதனை விசாரிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.இது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைகள் சட்டப் பிரிவு 18 க்கு எதிரானது.முன்ஜாமீன் பெறவழிவகை செய்யும் குற்றவியல் நடைமுறைச்சட்டம் 438 என்பது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைகள் சட்டப்படி பதிவு செய்யப்பட்ட வழக்குகளுக்கு பொருந்தாது என சட்டபிரிவு 18 கூறுகிறது.

தலித்துகள் மீதான தாக்குதல்: உண்மை என்ன?

ஒவ்வொரு 15 நிமிடத்துக்கு ஒருமுறை ஒரு தலித்துக்கு எதிராக ஏதாவது ஒரு குற்றம் இழைக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் 6 தலித் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். 2007லிருந்து 2017 வரையிலான பத்தாண்டுகளில் தலித்துகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் குற்றங்கள் 66 % சதவீதம் அதிகரித்துள்ளன. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் ஆவணங்களின் படி, கடந்த 10 ஆண்டுகளில் தலித் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வுகள் இரண்டு மடங்காகியுள்ளன.  தலித்துகளுக்கு எதிராக நடந்து கொண்டிருக்கிற வன்முறைச் குற்றங்களின் ஒரு சிறு துளிதான் இது. ஏனென்றால் பழிவாங்கும் நடவடிக்கைக்கு ஆளாவோம் என்ற அச்சத்தில், பாதிக்கப்பட்ட பல தலித்துகள் புகார் அளிப்பதே இல்லை.  

நிலைமை இவ்வாறு இருக்கையில் இந்த தீர்ப்பு சாதிய வன்கொடுமைகளுக்கும் சமூகத்தில் இன்னமும் நிலவும் தீண்டாமைக் கொடுமைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை கொண்டுவரும்போது அதில்  இச்சட்டத்துக்கான நோக்கங்கள் மற்றும் காரணங்களில், தலித்துகள் தங்களின் உரிமைகளை நிலைநாட்ட முயற்சிக்கும்போது, உள்நோக்கம் கொண்டவர்கள் தலித்துகளை மிரட்டுகிறார்கள் என்று நாடாளுமன்றம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. அதற்கேற்ப, தலித்துகளுக்கு எதிரான குற்றங்களின் பிரத்யேகத் தன்மையை கணக்கில்கொண்டு, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் முன்ஜாமீனுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படத்தக்க குற்றங்களை மேலோட்டமாகப் பார்த்தாலே ஏன் முன்ஜாமீன் மறுக்கப்படுகிறது என்று புரியும்.  மேலும், கர்த்தார் சிங் வழக்கில் , இத்தகை விலக்கு, அரசியல் சாசனத்துக்கு உட்பட்டதுதான் என்று உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு உறுதி செய்துள்ளது. எனவே தமிழக அரசு, ஜெயந்தி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உடனடியாக மேல்முறையீடு செய்திட வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில தலைவர் த.செல்லக்கண்ணு மாநில பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளனர்.