உடுமலை, ஆக.13- அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் திங்க ளன்று இரவு பெய்த கனமழையால் அணைக்கு வந்த 16 ஆயிரம் கனஅடி தண்ணீர் நள்ளிரவில் அப்படியே திறக்கப்பட்டது. உடுமலை அமராவதி அணை திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருவதுடன், ஆற்றின் வழியோர கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. இந்த அணையிலிருந்து கடந்த மாதம் பழைய ஆயக்கட்டு மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களிலுள்ள பயிர்களை காப்பதற்காகவும் பொது மக்களின் குடிநீர் தேவைக்காகவும் அணையிலிருந்து உயிர் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், அமராவதி அணை நீர்பிடிப்புப் பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து கடந்த மாதம் 18 ஆம் தேதி முழுக் கொள்ளளவை எட்டியது. இந்நிலையில் திங்களன்று இரவு கேரளா மாநிலம் மூணாறு, தலையாறு, மறையூர் பகுதியில் கனமழை பெய்து அணையின் பிரதான நீர்வரத்து ஆறான பாம்பாற்றின் மூலம் அணைக்கு நீர்வரத்து பலமடங்கு அதிகமானதால் அமராவதி அணையில் இருந்து இரவு சுமார் 16 ஆயிரம் கனஅடி தண்ணீர் ஆற்றில் திறக்கப்பட்டது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் அமராவதி ஆற்றின் கரை யோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறினர்.