போலி லாட்டரி சீட்டு விற்பனை செய்த ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவரை துடியலூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவையில் கடந்த வாரம் பாஜக இளைஞரணி நிர்வாகி சபரிபாலன் இதே வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த சஜீத் என்பவர் மூன்று நம்பர் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டபோது போலீசார் கைது செய்தனர்
இதுகுறித்து காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், கோவை நல்லாம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மூன்று நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் துடியலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் குரு சந்திரவடிவேல் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். அப்போது அங்கிருந்த மூவரை பிடித்த போலீசார் விசாரித்ததில் மூவரும் லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில் அவர்கள் மருதம் நகரை சேர்ந்த சஜீத், பூங்கா நகரை சேர்ந்த விக்னேஷ், சின்னவேடம்பட்டியை சேர்ந்த பிரகாஷ் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 25 லாட்டரி சீட்டுகள், செல்போன், வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.
இதில் சஜீத் என்பவர் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர் என்பதும், கடந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்காக 10 நாட்களாக முகாமில் தங்கி வேலை பார்த்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், அவர் தனது முகநூலில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் உடையை அணிந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
தடை செய்யப்பட்ட லாட்டரி, போலி லாட்டரி விற்பனை செய்த விவகாரத்தில் சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க இளைஞரணி நிர்வாகி சபரி பாலன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவரை போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.