districts

img

றந்து விளங்கும் லம்பப் பயிற்சி பள்ளி - - ஜெ.பொன்மாறன்

தமிழர்களின் தற்காப்புக்கலைகளின் முக்கியமானது சிலம்பம்.இந்த சிலம்ப விளையாட்டை மதுரையில் கற்றுத்தரும் அமைப்பு வாலிபர் சங்கம் விளையாட்டுக்கழக சிலம்பாட்ட பயிற்சி பள்ளி.  இந்திய ஜனநாயக வாலிபர் சங்க விளையாட்டு கழகம் சார்பில் 2014 ஆம் ஆண்டு நவம்பர் 3 அமைப்பு தினத்தன்று மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் ஆறு மாணவர்களோடு சிலம்பப் பயிற்சி பள்ளி துவங்கப்பட்டது. தமிழர்களின் வீர விளையாட்டை பாதுகாக்கும் நோக்கிலும் மாணவர்களை சிலம்ப பயிற்சியில் ஊக்கப்படுத்தும் நோக்கத்தில் இலவச பயிற்சி பள்ளியாக துவங்கப்பட்டது. இன்றைக்கு பெத்தானியாபுரம், மீனாட்சிபுரம், பைக்காரா, முனிச்சாலை, செல்லூர், எல்லீஸ் நகர் என்று 6 மையங்களில் சுமார் 900 மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மாணவர்கள் உற்சாகமாக பயிற்சி பெற்று செல்கிறார்கள்.  

இங்கு பயிற்சி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவில் ஐந்து முறை நடைபெற்ற போட்டியில் 350 பரிசுகளும், மாநில அளவில் ஐந்து முறை நடைபெற்ற போட்டியில் முதல் பரிசு ஒரு முறையும், இரண்டாம் பரிசு இரண்டு முறையும், மூன்றாம் பரிசு இரண்டு முறையும் பெற்றுள்ளார்கள்.  தந்தையின் ஆதரவில்லாமல் தாயின் ஆதரவில் வளர்ந்து வரும் கைத்தறி தொழிலாளியின் மகள் ஷாலினி என்ற மாணவி தேசிய அளவில் சிலம்ப போட்டிக்கு தேர்வாகியுள்ளார். இதுபோல் இன்னும் பல மாணவர்களை இந்திய ஜனநாயக வாலிபர் சங்க விளையாட்டுக்கழகம் ஊக்கப்படுத்தி வருகிறது. தமிழக அரசு தற்போது சிலம்ப விளையாட்டுப் போட்டியில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு கல்வி வேலைவாய்ப்புகளில் 3 சதவீத இட ஒதுக்கீடு அறிவித்துள்ளது வரவேற்கக் கூடியது. மதுரை மாவட்டத்தில் பல்வேறு விளையாட்டுகளுக்கு பயிற்சி பெறுவதற்கு விளையாட்டு அரங்கங்கள் உள்ளன. ஆனால் சிலம்பப் பயிற்சி எடுப்பதற்கான விளையாட்டு அரங்கம் இல்லை.இது பெரும் குறை.சிலப்பப் பயிற்சிக்கு தனி அரங்கம் வேண்டும் என்பது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கோரிக்கை. பலரும் சிலம்பப்பயிற்சிக்கு பணம்பெறும் நிலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க விளையாட்டுக்கழகம் இலவசமாக கற்றுக் கொடுக்கின்றது. ஆறு மாணவர்களோடு துவங்கப்பட்ட சிலம்ப பயிற்சி பள்ளி கடந்த 7 ஆண்டுகளில் 900 மாணவர்களை பயிற்றுவிக்கும் மிகப்பெரும் பயிற்சி மையமாக அமைந்துள்ளது. தமிழர்களின் வீர விளையாட்டை போற்றும் வகையில் ஜல்லிக்கட்டு போட்டி போல் தைத்திருநாளில் சிலம்ப போட்டியினையும் தமிழக அரசு மாநிலம் முழுவதும் ஒருங்கிணைத்து நடத்த வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோருகிறது. - ஜெ.பொன்மாறன்