districts

img

பான்பராக் எச்சை... - பூ.கீதா சுந்தர்

 முகத்தில் கொஞ்சமும்  கோபம் குறையாமல் புஸ், புஸ் என்று மூச்சு விட்டபடி நின்று கொண்டு இருந்தாள் கன்னிகா. காலை நேரம்  அவசர அவசரமாக  பிள்ளைகளை  பள்ளி யில் கொண்டு போய் விட பைக்கில் சென்று  கொண்டு இருந்தாள், அப்போது,  ‘சில்லென்று’முகத்தில் ஏதோ படவும், முன்னாடி உட்கார்ந்து இருந்த குழந்தை கைகளால் முகத்தை மூடிக் கொண்டான். அவள் முகத்திற்கும் நாற்றம் கலந்த அந்த சிவப்பு சாரல் அடித்தது. என்ன இது என்று யோசிக்கும் போது, ‘ சீ, பான்பராக் மென்று துப்பிய எச்சை ‘அப்படியே அவளுக்கு உடல்  பூராவும் பற்றி எரிந்தது. குழந்தையின் சந்தன நிற  யூனிபார்ம் சட்டையிலும் அந்த சிவப்பு புள்ளிகள் ஒட்டி இருந்தன. வண்டியில் சென்ற ஒருவனின்  பான்பராக் துப்பல் தான்  அது.. காற்றில் கலந்து வந்து அவர்களின்  முகத்திலும், ஆடையிலும் விழுந்தது. அவளால் அந்த கேவலத்தை சகிக்க முடியவில்லை.  வண்டியை இன்னும் சற்று வேகம் கூட்டினாள்..

எச்சில்  துப்பியவனின் வண்டியை துரத்தி பிடிக்க.  நல்ல வேளை யாக அந்த வண்டியே சிக்னலில் நின்றது. சிக்னலில் நின்ற  அந்த கொஞ்ச நேரத்தில் கூட மீண்டும் அவன் “பொச்சுக்”  கென்று துப்பினான். பக்கத்தில் நின்றவனின் பேண்டில் பட்டது. அவன் முறைத்தான். ஆனால் அவன் மீது ஓரு  அலட்சிய பார்வையை வீசி விட்டு திரும்பிக் கொண்டான் பான்பராக் எச்சை வாயன்.  இவள் தன் வண்டியை அப்படியே அவன்  வண்டி  முன்னாடி கொண்டு போய் நிறுத்தி  விட்டு  இறங்கினாள். “டேய், ஏன்டா இப்படி வழியில எச்சைய துப்பிக்கிட்டு  போற.. அறிவு இல்ல உனக்கு..பாரு எங்க மேல எல்லாம்  எப்படி எச்சை தெறிச்சி இருக்கு, இனிமே இப்படி பண்ணாத, ஒழுங்கா அதை ஓரமா  துப்பிட்டு போ,  இல்லன்னா முழுங்கி தொலைடா” என்றாள்.  “ஏய், இன்னா இந்த கத்து கத்தற... உம் மூஞ்சிலயா துப்பன.. வேணா சொல்லு, இப்ப துப்பறேன்” என்று திமிராகச் சொல்லவும், அவள் “பளார்” என்று ஓங்கி அறைய,  அவன் அப்படியே கன்னத்தைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான்.  “ஏய், நவுந்து வழி வுட்டு நில்லு.. எதிர்க்க வந்து இப்டி  நட்டக் குத்தலா நின்னுக்குற...ப்பே.. “

என்றான் அவன்.  கன்னிகா சட்டென நினைவுக்கு வந்தாள். அவன் தெனா வட்டாக வண்டியில் தான் உட்கார்ந்து இருந்தான். ‘ஓ... அப்ப நம்ம அவனை அடிக்கலையா? கற்பனை தானா?’ என்று தன்னை தானே ஒரு முறைக் கேட்டுக் கொண்டாள்.  “ஏங்க, என்னாங்க இது?

 போற வழியில் இப்டி எச்சை  துப்பிக்கிட்டு போறீங்க. பாருங்க குழந்தைங்க மேல எல்லாம் பட்டு எவ்வளவு அசிங்கமா, அருவருப்பா இருக்கு..” என்றாள்.  “தோடா, கேக்க வந்துட்டாங்க கலெக்டரம்மா, காலங்காத்தால, மரியாதையா வழிய வுட்டு  தூர போ”  என்றான். வாய் கோணி கோணி வைத்து அவன் பேசியதை பார்க்க அவளுக்கு உள்ளுக்குள் கோபம் அதிகமானது.  ஆனால் என்ன பண்ண முடியும், குழந்தைங்க வேற  வண்டியில இருக்காங்க, பள்ளிக்கு நேரமாகுது. தாமதமாக போனால் கைக் கட்டி, வாய் பொத்தி, கூனி குறுகியபடி பிரின்ஸ்பல் முன்னாடி போய்  நிற்க வேண்டும்.  அவர்கள்  முன் இன்னும் முழங்கலால் மண்டி  தான் போடவில்லை.  இந்த நிலையில், ‘இவனை என்ன செய்ய’... என்று தன் இயலாமையை எண்ணி வருந்தியபடி வண்டியை ஓட்டிக் கொண்டு சென்று விட்டாள் கன்னிகா.  மாலையில்,  “ஏய், இன்னாடி பண்ணி னுக்கீற, வா, வந்து சோறு போடு, காலையிலேந்து சுத்திட்டு இப்ப தான் வூட்டுக்கு வரேன்,  பசி வயித்தை கிள்ளுது.. சீக்கிரம் வாடீ..”  “தோ, இரு வரேன்... சும்மா கத்தாத..”  “ஏய், இன்னாடி நான்  பாட்டுக்கு கூப்ட்னேக்குறேன், நீ வரவே மாட்றே, அப்டி இன்னா பண்ற..?”

 பாத்ரூமில், தன் ஏழு வயது மகளின் ஆடைகளை கழட்டி  வைத்து விட்டு அவளை குளுப்பாட்டிக் கொண்டு  இருந்தாள்.  “தத்திரம் புடிச்ச நாய்ங்க, ரோட்டு ஒழுங்கா போவு துங்களா, என்னேரமும் வாயில கயித சானியப் போட்டு மென்னுன்னே இருக்க வேண்டியது, சும்மான்னாலும் போவுதுங்களா?.. ரோட்டுல போறப்போ காத்துல வீச்சுமேன்னு கூட அர்த்தம் அறிவில்லாம வழியாற துப்பினே  போவுதுங்கோ” என்று திட்டியபடியே குழந்தையின் ஆடை களை சோப்பு  தண்ணீரில் ஊற வைத்தாள்.  அப்படியே வாயடைத்து  நின்றிருந்தான் பான்பராக் வாயன்.  “தே.. ஏன் இங்க வந்து நிக்கிற, வா சோறு போடறேன்,  போய் முதல்ல வாயில இருக்கற அந்த கயித சாணிய துப் பிட்டு வாய் கயிவினு வா..” என்றாள் அவன் மனைவி.