தருமபுரி, டிச.9- மாரண்டஅள்ளி பகுதியில் உலா வரும் சிறுத்தைப்புலியால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே உள்ள புதூர் கிராமத்தில் ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் சிறுத்தைகள் இருப்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் காட்டுத் தீ போல் பரவியது. அந்த வீடியோவில் சிறுத்தைப்புலி ஒன்று 2 ஆடு, ஒரு நாயை கடித்து குதறியது தெரியவந்தது. இதையறிந்த கிராம மக்கள் பாலக்கோடு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பாலக்கோடு வனசரக அலுவலர் நடராஜ் மற்றும் வனத்துறையினர் புதூர் கிராமத்திற்கு விரைந்து சென்று சிறுத்தைகள் நடமாட்டம் குறித்து ஆய்வு செய்தனர். அதில் சிறுத்தைப்புலி ஒன்று 2 ஆடு, ஒரு நாயை கடித்து குதறியது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து ஆய்வு செய்தபோது சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பதை உறுதி செய்த வனத்துறையினர், வனவர் தலைமையில் தனிக்குழு அமைத்து சிறுத்தைப்புலியை கண்காணித்து வருகின்றனர். சிறுத்தைப்புலி பிடிபடும் வரை பொதுமக்கள் யாரும் இரவு நேரங்களில் தனியாக வெளியே நடமாட வேண்டாம் எனவும், குறிப்பாக குழந்தைகளை வெளியில் விளையாட விட வேண்டாம். வீட்டிற்கு வெளியே படுத்து தூங்க வேண்டாம். கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல வேண்டாம் என வனத்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். மேலும், சிறுத்தைப்புலி நடமாட்டம் குறித்து தெரியவந்தால் உடனடியாக பாலக்கோடு வனத்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு பாலக்கோடு வனசரக அலுவலர் நடராஜ் கேட்டு கொண்டுள்ளார். சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பதை அறிந்த அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.