நாமக்கல், ஜூலை 24- நாமக்கல் நகராட்சி பகுதியில் தூய்மை பணிகளுக்காக சிறியரக பொக்லைன் இயந்திரத்தை கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி., துவங்கி வைத்தார். நாமக்கல் நகராட்சி கூட்டரங்கில், நகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மே 10 ஆம் தேதியன்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நாமக்கல் நகராட்சியில் தூய்மை பணிகளை மேற்கொள்வதில் ஏற்படுகிற சிரமங்களை போக்குவதற்காக சிறிய இடத்திலும் தூய்மை பணிகளை மேற்கொள்ள ஏதுவாக சிறிய ரக பொக்லைன் இயந்திரங்கள் வழங்க வேண்டும் என்று நகர்மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். இக்கோரிக்கையினை ஏற்று மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், உடனடியாக தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இயந்திரங்களை வாங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார். அதன்படி நாமக்கல் நகராட்சியில் தூய்மை பணிகளை மேற்கொள்ள ரூ.29.60 லட்சம் மதிப்பீட்டில் மினி எஸ்க்வேட்டர் எனும் சிறிய ரக பொக்லைன் இயந்திரத்தின் பயன்பாட்டினை கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி., துவங்கி வைத்தார். இதன் மூலம் நாமக்கல் நகராட்சியில் பெரிய வாகனங்கள் செல்ல இயலாத சிறிய இடங்களிலும் இந்த வாகனத்தின் மூலம் மழைநீர் வடிகால்களில் மிக எளிதாக தூய்மை பணிகளை மேற்கொள்ள இயலும் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, இந்நிகழ்வில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.