districts

img

ஊர் புற நூலகர்களுக்கு பதவி உயர்வு நூலகத்துறை அலுவலர் சங்கம் வலியுறுத்தல்

கோவை மே 13- பணி விதிகளில் திருத்தம் செய்து, ஊர் புற நூலகர்களுக்கு பதவி உயர்வு வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு பொது நூலகத்துறை அலுவலர்கள் சங்கத்தின் பொதுக்குழு வலியுறுத்தியுள்ளது. இச்சங்கத்தின் மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தாமஸ் கிளப்பில்  மாநில தலைவர் பெ.பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. கோவை மாவட்ட அமைப்பாளர் ஆ.இளங்கோவன் வரவேற்றார். மாநாட்டை துவக்கிவைத்து அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஏ.ஜெகநாதன் உரையாற்றினார்.  இதனையடுத்து, சங்கத்தின் வேலையறிக்கையை மாநில செயலாளர் த.இளங்கோவன், நிநி நிலை அறிக்கையை மாநில பொருளாளர் கு.ராஜகுரு ஆகியோர் முன்வைத்தனர்.  முன்னதாக, கன்னிமாரா நூலக ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் எல்.புகழானந்த், நூலகர்கள் கூட்டமைப்பின் மாநில துணைத்தலைவர் கோ.உமாதேவி உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.  பொதுக்குழுவில், ஊர் புற நூலகர்களுக்கு பணி விதிகளில் திருத்தம் செய்து பதவி உயர்வு வழங்கிட வேண்டும்,  நூலகங்களின் தரம் உயர்த்திட வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  பொதுக்குழு  கூட்டத்தின் நிறைவாக புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில்,  மாநில தலைவராக டி.சண்முகம், மாநில செயலாளராக சு.குணசேகரன்,  மாநில பொருளாளராக கு.ராஜகுரு உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை நிறைவு செய்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.அன்பரசு நிறைவுரையாற்றினார். முடிவில், மாநில தணிக்கையாளர் தீ.சண்முகம் நன்றி கூறினார்.